முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
வில்பத்துத் தேசியவனத்தை 1990 இற்கு முன் பாதுகாத்து இயற்கையை நேசிப்பவர்களாக மறிச்சுக்கட்டி, பாலைக்குழி,கரடிக்குழி,முள்ளிக்குள மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் யானை பிடிக்கும் அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டிருந்தன.
அந்நியச் செலாவணியையும் இப்பிரதேசம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இப்பிரதேச மக்கள் விவசாயம் செய்தல், மந்தை வளர்த்தல் ,தேன் சேகரித்தல், வேட்டையாடல் போன்ற தொழில்களைப் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்துள்ளனர்.
இவர்களின் ஜீவனோபாயத்தைக் கருத்தில் கொண்டு யாருமே தடுப்பதில்லை. இது சரித்திரம். தலதா மாளிகைக்கும் இங்கிருந்து யானைகள் வழங்கப்பட்டுள்ளன.
1990 க்கு முன்பு கொண்டச்சி கஜூ பாமில் மினி இராணுவமுகாமும் , சிலாவத்துறையில் ஒரு இராணுவமுகாமும் இருந்தது.முசலிப் பிரதேசத்தில் பொலிஸ் நிலையமோ, வன இலாகா காரியாலயமோ இருக்கவில்லை. இப்பிரதேச மக்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்தனர். இராணுவத்தினரும் இம்மக்களுடன் சிறப்பாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம்கள்
வெளியேற்றப்பட்ட பின்னர் மிகவும் மோசமாக அழிக்கப்பட்ட பிரதேசம் முசலிப்பிரதேசமே. இங்கிருந்த வீடுகள்,சமயத்தலங்கள் போன்றவற்றின் ஓடுகள், கற்கள் என்பனவும் ஆயதக்குழுவால் பேர்மிட் முறைமூலம் விற்கப்பட்டுள்ளன.
இராணுவம் பின்வாங்கப்பட்டதால் பிரதேசம் முழுக்க ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. முஸ்லிம்களை மீளக்குடியேற அனுமதிக்க மாட்டோம் என்ற மமதையிலேயே அழகிய கிராமங்களை காடுகளாக மாற்றினர். அதுதான் 25 வருடக்காடு. பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். தொழினுட்பம் மூலம் வில்பத்துக்காடாகியது.
முசலிப்பிரதேசத்தில் இருந்த மலசலகூடங்களின் பேசின்கள்கூட அகற்றி எடுக்கப்பட்டிருந்தன என்றால் நிலைமையை யோசித்துப்பாருங்கள் பிரதேசத்தில் எஞ்சி இருந்த கட்டிடங்களின் சுவர்களை உடைத்து வீதி கொந்தராத்துக் காரர்கள் வீதிக்குப்போட்ட சரித்திரமும் உண்டு.அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்.
இது பழ மொழி ஒரு நாளும் பொய்க்;காது.மறிச்சுக்கட்டி ஆதாரமாகக் காட்டப்படும் கிணறுகளில் காணப்படும் எம்.சி.எ.கபூர் என்பவர் நீண்டகாலம் சேவை செய்த கிராம சபைத்தலைவர். (வி.சி.சேர்மன்)போக்குவரத்துச் சிரமங்கள் நிறைந்திருந்த அக்காலத்தில் அங்கு சென்று அம்மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டார்.அன்று அப்பிரதேச மக்களிடையே மிகுந்த மதிக்கப்பட்டவராக இவர் காணப்பட்டார்.
இந்தச்சுதந்திர பூமியில் தேவையற்ற போலிப்பிரச்சினைகள் உருவாவதற்கு யார்? காரணம் என்பதை அனைவரும் அறிவர். இவர்களின் ஏஜண்டுகள் பிரதேச செயலகத்திலும், கடற்படையிலும் இருந்து கொண்டு ஆவனங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை உடனுக்குடன் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர் இவர்களை இனம்கண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
பண்டைக்காலம் தொட்டு சிங்கள முஸ்லிம் உறவு பலமாக இருந்து வருகின்றது.இவர்களின் பிணைப்பு தேக்குமரம் போல உறுதியானது.இதை அரிப்பதற்கு கறையான் அடிக்கடி முயலுகிறது.ஆனால் ஒரு போதும் நடைபெறாது.
25 வருட அவலவாழ்வு வாழ்ந்த இம்மக்களின் பிரச்சினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.காலம் நீடிக்க, நீடிக்க புதிய பிரச்சினைகள் தோன்றும்.நல்லாட்சியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தோன்றியுள்ளது. அமைச்சர் ரவிகருனாநாயக்க தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு அமைச்சர் றிசாத் பதியுதீன்
தனியாகச் சுமந்த சுமைகளை சுமக்கும் பங்காளிகளாக மாறவேண்டும்.என பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
