அதாவுல்லாவின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டதே மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்கான கட்டிடம்!

எம்.வை.அமீர் -

ருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்துக்கு அடிக்கல் நடுகைக்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் குறித்த மூன்று மாடிக் கட்டிடம் தொடர்பில் அப்பாடசாலையின் பழைய மாணவர்களில் ஒருவரான நதீர் பாறூக் எமது செய்திச்சேவைக்கு இவ்வாறு கருத்துத்தெரிவித்தார்.

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்கான பௌதீக வளமானது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மறைவின் பின்னர் எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இதனடிப்படையில் அப்போதய அல்மனார் அதிபர் எஸ்.எல்.ஏ.றஹீம் அவர்களின் காலத்தில் அவரது தலைமையில் பிரமாண்டமான விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு பிரதம அதிதியாக அப்போதய கிழக்கு உட்கட்டமைப்பு அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு இக்கல்லூரிக்கான பௌதீக வளத் தேவையை நிறைவு செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

மேற்படி வாக்குறுதிக்கிணங்க அப்போதய பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் அதிபர் தலைமையில் அக்கரைப்பற்றுக்குச் சென்று அமைச்சரைச் சந்தித்து மகஜரினையும் கையளித்ததன் பேரில் முதற்கட்டமாக 4மில்லியன் ஒதிக்கித்தருவதாகக்கூறி வேலைகளை ஆரம்பிக்குமாறு வேண்டிக் கொண்டார். அப்போதய அதிபர் அதனை மறுத்துவிட்டு பூரணமான மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்தினை அமைப்பதற்கு முழுமையான தொகை பணம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதனை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து வந்த பல சந்தர்ப்பங்களிலும் அடிக்கடி பல்வேறுபட்ட நிகழ்வுகளிலும் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் அல்-மனார் மத்திய கல்லூரியிலேயே கலந்து கொண்டார். இதனை சாதகமாகப் பயன்படுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பாடசாலையின் வகுப்பறைக் கட்டிடத் தேவையை வலியுறுத்தி வந்தனர்.

பின்னர் அதிபராக இருந்த டாக்டர். எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா அவர்களது காலத்தில் இதற்கான பலமான முயற்சி எடுக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு வகுப்பறைத் தேவை தொடரபான வேண்டுகோள் கடிதத்தினை பாடசாலை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் உள்ளுராட்சி அமைச்சருக்கு நேரடியாகவே அப்போதய அபிவிருத்திச் சபை உறுப்பினர் எம்.ஐ.எம். வலீத், அமைச்சில் வைத்து கையளித்தார். அவ்வேளை அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் அமைச்சிலிருந்து தொலைபேசியூடாக அதிபருடன் தொடர்பு கொண்டு இதற்கு சாதகமான முடிவினைத் தருவதாக உறுதியளித்திருந்தார்.

பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளினால் சில காலம் கிடப்பில் கிடந்து இறுதியாக 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்று கனிஸ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின் அல்-மனார் அபிவிருத்திச் சபை உறுப்பினர்களுக்கும், அமைச்சர் அதாவுல்லாவிற்கும் இடையில் கல்லூரியின் பழைய மாணவன் எம்ஐ.எம். வலீதின் ஏற்பாட்டின் பேரில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இச்சந்திப்பில் 2014ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் (DCB) கோல்ட்மைன்ட் விளையாட்டுக் கழகத்திற்கு 200,000.00ரூபாவும் அல்-மனார் மத்திய கல்லூரிக்கு தனது அமைச்சின் கீழுள்ள செயற்திட்டமான Transforming the Education System as the Foundation of a Knowledge Project (TSEP) -World Bank இனுள் சகல வசதிகளும் கொண்ட 03மாடி வகுப்பறைக் கட்டிடம் தருவதாக உறுதி அளித்து அதற்கான ஏற்பாடுகளும் உடனடியாகவே மேற்கொள்ளப்பட்டது.

உள்ளுராட்சி மன்றங்களிற்கான செயற்திட்ட ரீதியாக அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்ளும் அப்போதய பாடசாலையின் அபிவிருத்திச் சபை உறுப்பினரும், திட்ட அதிகாரியுமான எம்.ஐ.எம் வலீத் அவர்கள் மேற்படி முயற்சியை வெற்றியாக மாற்றுவதற்கு அமைச்சருடன் இணைந்து செயற்பட்டார்.

இதற்கு அமைவாக கடந்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாண சபையில் இருந்து மேற்படிTSEP - World Bank 03 மாடிக்கட்டிடத்திற்கான Estimate தயாரிப்பதற்காக பொறியியலாளருடன் உடன் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். ஜலீல் அவர்களும் இணைந்து கல்லூரிக்கு வருகை தந்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச். றகுமான்,அதிபர் எம்.எப். ஹிர்பஹான், அபிவிருத்திச் சபை செயலாளர் எம்.ஐ.எம். முகர்ரப், காணிப் பதிவாளர் ஜமால் முஹம்மட், உதவிப் பதிவாளர் எம்.எப். மர்சூக் உட்பட ஏனைய பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும், சில ஆசிரியர்களும் இச்சந்திப்பில் பிரசன்னமாகி இருந்தனர்.

மேற்படி சந்திப்பின் போது பதிவாளர் ஜமால் முஹம்மட் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீலிடம் இங்கு அமையவுள்ள 03மாடிக் கட்டிடத்திற்கான பிரதான காரணகர்த்தா யாரென பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வலயக்கல்விப் பணிப்பாளர் இக்கட்டிடமானது உலக வங்கித் திட்டத்தின் கீழ் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இக்கட்டிடம் இங்கு அமையவுள்ளதாகவும் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் குறிப்பிட்டார். இறுதியில்Ismail Moulana Block இருக்கும் இடத்தில் இதற்கான Estimate (110X25) எடுப்பது எனவும் தீரமானிக்கப்பட்டது.



மேலும் ஜனாதிபதித தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் இருக்கும் பொழுது இக்கட்டிடத்தின் பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், அக்கரைப்பற்று கல்வி வலய 03 பாடசாலைகளுடன் கல்முனை வலய மருதமுனை அல்-மனாருக்கும் ஒன்றாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் Tender Call பண்ணப்படவுள்ளதாக உத்தியோக பூர்வத் தகவல் உள்ளுராட்சி அமைச்சிலிருந்து அமைச்சரின் இணைப்புச் செயலாளரினூடாக பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் எம்.ஐ.எம். முகர்ரபிற்கு அறிவிக்கப்பட்டது.

விடயங்கள் இவ்வாறு இருக்கையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் செய்ததை மூடி மறைத்து சம்பந்தம் இல்லாதவர்கள் இதற்கு பெயர் எடுப்பதை எமது அல்-மனார் சமூகம் விரும்பக்கூடாது.

இது மாத்திரம் அல்லாமல் இறுதியாக கல்லூரி அதிபர் எம்.எப். ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்ற (மே-2015) பாடசாலை அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் இக்கட்டிடத்தினை எமக்கு வழங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக செயற்பட்ட சகோதரர் வலீத் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

எனவே, எனது அன்பான விண்ணப்பமானது நாட்டின் ஆட்ச்சி மாற்றப்பட்டு தற்போது நல்லாட்ச்சி நடைபெறுகிறது. இந்த நல்லாட்சியின் கருப்பொருளுக்கு அமைவாக கட்டிடத்தினை வழங்கியவர் அப்போதய அமைச்சரும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்கள் என்பதினை மனதார ஏற்றுக்கொண்டு எவரும் அடிக்கல் நடும் நிகழ்விற்கு தாராளமாக, சந்தோசமாக வந்து பங்குபற்றுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

மேற்படி விடயத்தினை நமதூருக்கு நிறைவேற்றிய முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாவுடன் உடன்பாடோ, முறண்பாடோ அவைகள் ஒருபுறம் இருக்க உண்மைகளை மூடி மறைத்து நினைவுக் கற்களில் போலியாக தங்களது பெயர்களைப் பதிப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் நமது அரசியல் பெரும் தகைகளே!

'மருதமுனை மண் பதவிகள் எதுவும் இல்லாமல் ஓய்வுபெற்றிருந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரிற்கு வியத்தகு பாராட்டு விழாவினை நடாத்திய நன்றிக்குரிய (பெருமைக்குரிய) ஊர் என்ற நாமத்தினை அரசியல் வரலாற்றிலிருந்து அழிப்பதற்கு இது போன்ற செயல்கள் காரணமாக அமைந்து விடக்கூடாது.'
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -