அஷ்ரப் ஏ சமத்-
இலங்கையின் முதலாவது தமிழ் மொழி அல் குர்ஆன் விளக்கவுரை வெளியீடு
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும், அக்குரணை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் ஸ்தாபகப் பணிப்பாளருமான உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மன்ஸூர் (நளீமி) 'குர்ஆனிய சிந்தனை' என்ற பெயரில் எழுதியுள்ள அல் குர்ஆன் விளக்கவுரை (தப்ஸீர்) யின் முதலாம் பாக வெளியீட்டு விழா 02.07.2015 அன்று மாலை இப்தாரைத் (6.15 மணிக்கு) தொடர்ந்து கொழும்பு – 10 டி. ஆர். விஜேவர்தன மாவத்தை இலக்கம் 310 இல் அமைந்துள்ள தபாலகத் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீட உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்; சி.. ஐயூப் அலி (நளீமி) தலைமையில் நடைபெறவுள்ள இவ்வெளியீட்டு விழாவில் ஜாமிஆ நளீமிய்யாக் கலாபீடப் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி பிரதம அதிதியாகவும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். எம். ஏ. முபாரக் (மதனி) கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அல் குர்ஆன் விளக்கவுரையொன்று கொண்டிருக்க வேண்டிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள முதலாவது தப்ஸீராக இது விளங்குகின்றது. அத்தோடு இலங்கையில் எழுதப்பட்டுள்ள முதலாவது அல் குர்ஆன் விளக்கவுரையும் இதுவே.
குர்ஆனிய சிந்தனை என்ற பெயரிலான இவ்விளக்கவுரையின் முதலாம் பாகம் அல் குர்ஆனினின் முதலிரு அத்தியாயங்களான பாத்திஹா மற்றும் பகறாவுக்கான விளக்கவுரையாகக் காணப்படுகின்றது.
