(ஹாசிப் யாஸீன்)
நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிறாத அரசியல்வாதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திகழ்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி தனக்கு இரண்டு தடவைகள் போதாது மூன்று தடவைகளல்ல வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கவே ஆசைப்பட்டார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் தனக்கிருந்த அதிகாரங்களை குறைத்துள்ளதுடன் இரு தடவைகள் ஜனாதிபதியாக இருக்கலாம் என்றபோதும் தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாக ஒரு தடவையே ஜனாதிபதியாக இருப்பேன் என விடிவாதம் பிடிக்கும் அபூர்வமான ஜனாதிபதியாக காணப்படுகிறார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூhயில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (08) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
கல்லூரியின் அதிபர் திருமதி எஸ்.ஏ.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகள் நினைவுச் சின்னம் வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.


