எஸ்.எல்.எம்.பழீல் BA-
'இந்த மரம் கனியே தராத பிரயோசனமற்ற மலட்டுமரம் என ஆரம்பத்தில் கூறினர். அப்படி அது கனிதான் தந்தாலும் சீ.... சீ.... அது புளிக்கும் என்றனர். இன்னும் சிலர் இம்மரம் விறகுக்குக்கூட பயன்படாது என்றனர். ஆனால் அத்தனை வசைகளோடும் விமர்சனங்கள் கழுத்தறுப்புகளுக்கு மத்தியிலும் இறைவனால் வழங்கப்பட்ட அந்த சமுதாய அமானித மரத்தை இன்றுவரையும் பாதுகாத்து இன்றைய நல்லாட்சியில் கிழக்கில் எல்லா சமுதாயங்களுக்கும் நிழலாக மட்டுமல்ல காய்கனிகள் தரக்கூடிய கற்பக தருவாகவும் அம்மரத்தை எமது தேசியத்தலைவர் மாற்றியிருப்பது எமதுசமுதாயத்தின் பொறுமைக்கும் தேசியத்தலைவரின் அரசியல் பக்குவத்திற்கும் அரசியல் சாணக்கியத்திற்குமான சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்' இவ்வாறு சமாதானம் நல்லிணக்கத்திற்கான ஒழுங்கமைப்பின் பணிப்பாளர் நாயகமும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீட உறுப்பினரும, கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜனாப் பழீல் BA அவர்கள் சமகால அரசியல் கண்ணோட்டம் பற்றி ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிழக்கு கூட்டாட்சி:
ஜனவரி 8ல் தோற்றுவிக்கப்பட்ட நல்லாட்சியின்கீழ் கிழக்குமாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சி.ல.மு.காங்கிரஸ் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ள தேசிய ஆட்சியின் மீது விடுக்கப்பட்டுவரும் கேள்விகள், விமர்சனங்கள், வங்குறோத்து ஆர்ப்பரிப்புகள் பற்றி அவர் விளக்கமளித்தார். மாகாணசபையின் முன்னாள் முதல்வர் பிள்ளையான், முன்னாள் அமைச்சர்களான உதுமாலெவ்வை, சுபையிர் போன்றோரினால் கிழக்கு மாகாண ஆட்சி, கிழக்கு முதல்வர், சி.ல.மு.காங்கிரஸ் தமிழ்தேசியக் கூட்டமைப்புடனான நல்லிணக்கம் சம்பந்தமாக விடுக்கப்பட்டுவரும் விமர்சனங்கள்,குற்றச்சாட்டுக்கள் என்பவை பறிபோன பதவிகளின் ஆற்றாமை,பிரதிவிம்பங்களே ஒழிய வேறொன்றுமில்லை என ஜனாப் பழீல் எடுத்து விளக்கினார்.
மகிந்தவின் மாயஜால ஆட்சியில் சந்தர்ப்ப வசத்தால் அவர்களிடம் மாட்டிய அதிகாரக்கதிரைகள் இவ்வளவு சீக்கிரம் பறிபோகும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை.ஜோதிடத்திலும் அரசியல் தில்லுமுல்லு'விலும் அடிப்படைகளைக்கொண்டு இனவாத்தை இரையாக்கிய மகிந்தவின் ஆட்சி நித்தியமானது, அந்த மாயாஜால அதிகாரத்தில் தொடர்ந்தும் மிதக்கலாம் என்று அவர்கள் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அக்கனவு நீடிக்கவில்லை. அந்த வேள்வியின் புளுக்கத்திலேயே இன்னும் அவர்கள் புலம்புகின்றனர். ஆரம்பத்தில் கிழக்குமாகாணஆட்சி குலையமாட்டாது என்று நம்பினர். தமிழ்கூட்டணி முஸ்லிம் காங்கிரசோடு இணைவதா? அது முயற்கொம்பென்றனர். இனவாதிகளை இணைத்துக்கொண்டு கிழக்கு ஆட்சிக்கான இணைவையும், கூட்டாட்சியையும் குலைக்கப் பார்த்தனர். ஆனால் சி.ல.மு.காங்கிரசினதும் த.தே.கூட்டமைப்பினதும் அரசியல் முதிர்வு, புரிந்துணர்வுகளுடன்கூடிய தலைமைகளின் சாணக்கியங்கள் மக்களுக்காக தாமெடுத்த முடிவுகளில் கொண்டிருந்த நிலைபேறு என்பவற்றால் இனவாதிகளின் சாயங்கள் வெளுத்துப்போயின. ஒன்றுமே பலிக்காத நிலையில் இன்று கனவில் உளறுகின்றனர்.
கட்சிகளையும் சமுதாயங்களையும் கூறுபோட்டு பிரித்தாழுவதிலே மகிந்தவின் ஆட்சியிலே கற்றுத் தேர்ந்தவர்கள் இவர்கள். சமுதாயங்களைக் காட்டிக்கொடுத்து இனவாதங்களின்மூலம் தம்மை அபிவிருத்தி என்றபோர்வையில் வளமாக்கி ஆளாக்கிக் கொண்டவர்கள் இவர்கள். இன்று கைசேதப்பட்டு நிற்கின்றனர். எனவேதான் நல்லாட்சியின் பின்பும் மகிந்தவின் மாயாஜால ஆட்சி மீண்டும்வராதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கிழக்குமாகாண ஆட்சி ஜனநாயகத்தின் கோட்பாட்டு விழுமியங்களின் அடிப்படையில் அரசியலமைப்புக்கு முரண்படாது அமைக்கப்பட்டுள்ள இஸ்திரமான நல்லாட்சி. அதன் முதலமைச்சர் சகோதரர் ஹாபிஸ் நசீர் அவர்கள் தமது சிறுவயதிலேயே புனித திருக்குர்ஆனை முற்றாக மனனம்செய்த கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஹாபிழ்.
அதன் மகிமைதான் கிழக்கு முதலமைச்சர் என்ற மகுடத்தினை அவருக்கு வழங்கியிருக்கின்றது. தேர்ந்த பொறியியலாளர். எமது தேசியத்தலைவர் மாண்புமிகு அமைச்சர் றஊப்ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் தனது கடமைகளை வேகமாக முன்னெடுத்துச் செல்பவர். நீதி, நியாயம்,சமாதானம், சமூகங்களின் நல்லிணக்கம் சகவாழ்வுக்காக தன்னால் முடியுமானவைகளைச் செய்யவேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றார். கடந்த 03மாதங்களில் அவர் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் இப்பொழுது வெற்றியளிக்கத் தொடங்கியிருக்கின்றன. கொடூர யுத்தத்தனால் பாதிக்கப்பட்டு அத்தனையும் இழந்து நிற்கும் கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுப்பதிலே தமிழ்த் தலைமைகளோடு இணைந்து பணியாற்றி வருகின்றார். கிழக்கிலே வாழும் இருசமூகங்களும் இணைந்து சகவாழ்வுடன் செயலாற்றுவதன் மூலம்தான் சமாதான சகவாழ்வை ஏற்படுத்த முடியும் என்ற திடமான நம்பிக்கை எம் சமூகங்களிடையே ஏற்படல் வேண்டும்.
தேசிய நல்லாட்சி :
மதிப்புக்குரிய ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சியின் கீழ் இலங்கைவாழ் முஸ்லிம் சமுதாயம் இன்று நிம்மதியான முறையில் தமது ரமழான்மாத கடமைகளை முதல்முறையாக மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலுக்கு முதலில் படைத்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். கடந்த 3-4 வருடங்களாக மகிந்தவின் மாயஜால ஆட்சியில் இந்நாட்டு முஸ்லிம்கள் சமய சமூக அடிப்படைகளில் எதிர்கொண்ட சங்கடமான சூழ்நிலைகளை எதிர்நோக்கினர். 1915ல் ஏற்பட்ட இனக்கலவரத்தின் 100வருட பூர்த்தியை தெற்கிலே அளுத்கமவிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை 'பொதுபலசேனா' ஆட்சியாளர்களின் பூரண ஆசீர்வாதத்தோடு அரங்கேற்றவிருந்தனர். ஆனால் அந்த பேரழிவு இறைவனால் தடுக்கப்பட்டது.
அன்றிருந்த அச்சம்,சங்கடம், மனஉளைச்சல், சீரழிவுகள் இன்று நீக்கப்பட்டுள்ளன. இந்நிலைமைகளை மேலும் வலுப்படுத்தவேண்டியது சமுதாயத் தலைவர்களின் கடமையாகும்.
சமுதாய குழப்பம்:
சமுதாயத்தை மேலும் குழப்பி விடுவதற்கான முயற்சிகள் நமது அரசியல் தலைமைகளைக் கொண்டே இன்னும் முயற்சிக்கப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. பக்குவமாக மசூறாஅடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்கள், கோரிக்கைகளை எடுத்தவாக்கிலே நாம் காலநேர சூழ்நிலைகளைப் பாராது அறிக்கைகள், கடிதங்கள்மூலம் அள்ளி வீசுவதன் மூலம் நாம் எதனையும் சாதித்து விடமுடியாது. தனிமரம் தோப்பாக முடியாது.
மகிந்தவின் சால்வையில் உள்ளும் புறமும் தொங்கியிருந்து வருடக்கணக்கில் ஆமாப் போட்டு சாமரை வீசிவிட்டு இன்று நல்லாட்சி மலர்ந்து 3மாதங்கள் முடியுமுன்பே அத்தனையும் தரவேண்டுமென அடம்பிடிப்பது அதற்காக தேசியத் தலைவரை அறிக்கைகள் மூலம் நையப்புடைப்பது ஆரோக்கியமான அரசியலாக மாட்டாது. கடந்தகால அமைச்சு அதிகாரங்களின்போது நாம் இச்சமுதாயத்திற்காக எதைத்தான் செய்தோம்? நாமாக மீளாய்வு செய்யவேண்டியுள்ளது. தமது சுயநல இருப்புக்காக சமுதாயத்தை குழப்பிவிடுவது அல்லது சமுதாய இயக்கத்தை மலினப்படுத்துவது இஸ்லாமியப் பார்வையில் பாரிய குற்றமாகும். மலர்ந்த நல்லாட்சியில் எமது பங்குகளைப் பெறுவதற்கு அந்த ஆட்சியை இஸ்திரப்படுத்த வேண்டியுள்ளது. உலகிலேயே விநோதமான அற்புதமான ஆட்சி இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்றது. சிறையிலிருந்து விடுதலையாகி தென்ஆபிரிக்காவில் ஆட்சிஅமைக்க முற்பட்ட சர்வதேச மனிதநேயத் தலைவர் 'நெல்சன் மண்டேலா' அவர்கள் இதேபோன்ற குழப்பகரமான விநோத நிலையைத்தான் ஆபிரிக்க தேசியகாங்கிரசில் எதிர்நோக்கினார் என அரசியல் ஆய்வாளர்கள் ஒப்பிட்டு எழுதுகின்றனர். ஆனால் மைத்திரி இந்த சவால்கள் குழப்பங்களையெல்லாம் தாண்டி பிரதமரின் ஒத்துழைப்போடு தேர்தலின்பின்பு நிலையான ஆட்சி அமைவதற்குரிய சூழலை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதுவரையும் பொறுப்புடனும், பக்குவத்துடனும்,பொறுமையுடனும் காரியங்களை, காய்நகர்த்தல்களை செய்யவேண்டியது அரசியல் தலைமைகளினதும் சமுதாயத்தினதும் தலையாய கடமையாகும். இந்த பல்லின சமுதாயங்கள்,கலாசாரங்கள் வாழும் இந்நாட்டில் ஒருகண்ணாடி குவளையினுள் வாழ்வதைப்போன்று பக்குவமாக வாழவேண்டியது இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகவுள்ளது.
'தலைமைத்துவக் கட்டுப்பாட்டுடன் ஒற்றுமையாக மசூறா அடிப்படையில் தீர்மானங்களுக்கு வந்து செயற்படுவதே எமது சமுதாயத்தின் விடிவுக்கான ஒரே வழியாகும் என்று ஜனாப்.பழீல் தனது முடிவுரையில் குறிப்பிட்டார்.
சுலைமான் எல் முனாஸ்