நல்லாட்சி என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு அரசியல் கோசமல்ல அரசியல் இலட்சியமாகும்- ரஹ்மான்

ல்லாட்சி என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு அரசியல் கோசமல்ல அரசியல் இலட்சியமாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.எஅப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்புக் கூட்டம் காத்தான்குடியில் சனிக்கிழமை(30.5.2015) இரவு நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், "நல்லாட்சி என்பது அரசியல் கோசமாக மட்டும் மாறியுள்ளது. அதன் எந்த பெறுமதியும் அவர்களுக்கு தெரியாது. ஆனால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு நல்லாட்சி என்பது அரசியல் இலட்சியமாகும். அதற்காகவே வாழ்கின்றோம். அதற்காகவே குரல் கொடுக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தலுக்குப்பிறகு இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை நல்லாட்சியல்ல நல்லாட்சியின் தொடக்கமாகும்.

ஒரு நல்லாட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான பல விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளது. அதை ஒரு தனிமனிதாக இருந்து கொண்டு ஜனாதிபதியால் மாத்திரம் செய்யமுடியாது.

அந்த நல்லாட்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற ஒரு பாராளுமன்றம் தேவை, அந்த பாராளுமன்றத்திலிருந்து நல்லாட்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற ஒரு அமைச்சரவை தேவை, இன்னும் பல அதிகார கட்டமைப்புக்கள் தேவை அதை பொதுமக்கள் தான் தெரிவு செய்ய வேண்டும்.

ஜனாதிபதி மைத்தரிபால அவர்களினால் தெரிவு செய்யமுடியாது. மக்கள் தெரிவு செய்து அனுப்புகின்றவர்களை வைத்துத்தான் அமைச்சரவை அமைக்கமுடியும். பாராளுமன்றத்தை நடாத்த முடியும்.

இப்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் முடிவடைந்த மாற்றமல்ல மாற்றத்திற்கான தொடக்கமாகும். அதை தொடர்ந்து உருவாக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப்பிறகு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இப்போது ஒரு தேசிய சக்தியாக பார்க்கப்படுகின்றது. கடந்த 2006ம் ஆண்டு இந்த வேலைத்திட்டத்தினை நாம் தொடங்கிய போது பல சந்தேகங்களுடன் பார்க்கப்பட்டது.

கடந்த ஒன்பது வருடங்களாக பல தியாகங்களுடன் உழைத்து இந்த நாட்டிலே ஒரு தேசிய மாற்றத்திற்கு முன்னணியாக நின்று பங்களிப்பு செய்து அதன் பிரகாரம் ஒரு தேசிய சக்தி என்ற அங்கீகாரத்திற்குட்பட்டுள்ளோம்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போட்டியிடும்.

மட்டக்களப்பில் மாத்திரமின்றி இலங்கையிலே குறைந்தது பத்து மாவட்டங்களில் போட்டியிட வேண்டுமென்ற ஒரு வேலைத்திட்டத்தினை நாங்கள் செய்து வருகின்றோம்.

அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை, குருநாகல், கம்பஹா, கண்டி, பதுளை, புத்தளம் போன்ற பத்து மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதில் சில மாவட்டங்களில் எமது வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுவார்கள். இன்னும் சில மாவட்டங்களில் நாங்கள் ஒப்பந்தம் செய்து கொள்கின்ற ஆதரவளிக்கின்ற கட்சிகளுக்கு தரமான வேட்பாளர்களுக்கு நாங்கள் அங்கு ஆதரவளிப்போம்.

அமையப்போகும் நாடாளுமன்றத்தில் நல்லாட்சிக்குரிய பிரதிநிதிகளாக இரண்டு பேராவது இருக்க வேண்டும் இரண்டு பேர் நல்லாட்சியின் குரல்களாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் என்னமாக கொண்டுள்ளோம்.

இந்த நாட்டில் ஜநாயகம் பற்றி பேசுகின்றவர்கள் ஜனநாயகமாக நடந்து கொள்வதில்லை. சட்டம் ஒழுங்கை பேசுகின்றவர்கள் அதை மீறுவதில் முன்னணியில் இருக்கின்றார்கள்.

அந்த வகையில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நல்லாட்சி பிரதிநிதிகளாக இரண்டு குரல்களையாவது பாராளுமன்றத்திற்கு அனுப்ப உத்தரவாதப்படுத்தும் வேலைத்திட்டத்தினை மேற் கொண்டு வருகின்றோம். அதன் முதலாவது பிரதிநிதியை தெரிவு செய்யக் கூடிய சாத்தியப்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அத்திவாரம் அதன் முதுகெலும்பு, மட்டக்களப்பு மாவட்ட மக்கள்தான் இதன் சொந்தக்காரர்கள் அதற்காக இங்குள்ள மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குபவர்கள் எப்படியிருக்க வேண்டுமென்றால் எதிரிகளுடைய மரியாதையை வெல்லக் கூடியளவு சுயமரியாதையைக் கொண்ட தலைவர்களாக இருக்க வேண்டும்.

அரசியல் பதவிகளை வைத்துக் கொண்டு கொந்தராத்து செய்யாதவர்களாக அதை வைத்து வயிற்றுப்பிழைப்பு நடாத்ததவர்களாக அதை வைத்து ஏனைய வசதி வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளாதவர்களாக சுதந்திரமாக மக்களுக்கு பேசுபவர்களாக இருக்க வேண்டும்.

அந்த சுதந்திர உனர்வுதான் நமக்கு சுயமரியாதையைத் தரும். அந்த சுயமரியாதைதான் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தேசிய அரங்கில் பேசுவதற்கான உரிமைய நமக்கு தரும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது" என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -