தற்பொழுது இலங்கை வந்துள்ள இந்தியாவின் பாரிய வர்த்தக, கைத்தொழில் நிறுவனமான டாட்டா சன்ஸ் குழுமத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகளை செவ்வாய்கிழமை (26) முற்பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
நகர அபிவிருத்தி உட்பட பல்வேறு பயனள்ள துறைகளில் இலங்கையில் கூடுதலான முதலீடுகளை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை கண்டறிவதே டாட்டா குழுமத்தின் நிறைவேற்று சபையின் தலைவரும், சர்வதேச வர்த்தக அபிவிருத்தி மற்றும் பொது விவகார தலைவருமான மது கண்ணன் தலைமையில் இலங்கை வந்துள்ள பிரஸ்தாபக் குழுவின் நோக்கமாகும்.
அமைச்சின் மேலதிகச் செயலாளர் பீ.சுரேஷ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நயன மாவில்மட, நிறைவேற்றுப் பணிப்பாளர் கிஷான் கருணரத்ன ஆகியோர் உட்பட உயரதிகாரிகளும் கலந்துரையாடலில் பங்கு பற்றினர்.(ந)

