எம்.எம்.ஏ.ஸமட்-
அநீதி இழைக்கப்படவிருந்த கிழக்கு மாகாண டிப்ளோமாதாரிகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீமுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் கிழக்கு மாகாண டிப்ளோமாதாரிகள் சார்பில் பாராட்டுதலுடனான நன்றிணையினைத் தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
கிழக்கு மாகாணத்திலுள்ள இரு தேசிய கல்வியியற் கல்லூரியிலும் 3 வருட ஆசிய முன் பயிற்சிக்கான தேசிய டிப்ளோமா பட்டம் பெற்ற டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரிய நியமனம் கடந்த வருடம் வழங்கப்பட்டது போன்று இவ்வருடமும் கிழக்கு மாகாணத்திற்கு வெளியேவுள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் வழங்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சில டிப்ளோமாதாரிகளும் அவர்களின் பெற்றோர்களும் என்னை நேரில் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் கேட்டுக் கொண்டனர்.
இதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இது தொடர்பில் ஊடங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இன்று(05) கல்வி அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடி ஒரு சாதகமான தீர்வைப் பெற்றிருப்பதாக அறிய முடிந்துள்ளது.
இச்சாதகமான தீர்வின் பிரகாரம் கிழக்கு மாகாண டிப்ளோமாதாரிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்புவதுடன் இந்நடவடிக்கையினை மேற்கொண்ட தலைவர் றஊப் ஹக்கீமுக்கும் முதலமைச்சருக்கும் கிழக்கு டிப்ளோமாதாரிகள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் மேலும் தெரிவித்தார்.(ந)
.jpg)