பாடசாலை மாணவி வித்தியா மீதான வல்லுறவு மற்றும் கொலையின் பின்னணியில் வடக்கின் சிவில் வாழ்க்கை மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பட்சத்தில் வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றுவிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தினர் தங்களது தளங்களில் மாத்திரமே நிலைகொண்டுள்ளனர். இதனால் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சட்டத்தையும் ஒழுங்கையும் பேண முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது.
இவ்விவகாரத்தின் காரணமாக வடக்கில் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு பாரிய அச்சுறுத்தலானதுடன், மிக மோசமான நடவடிக்கையொன்றுக்கும் வழிசமைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தமிழ் ஆயுததாரிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், எனவே சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்./ச/