வித்யாக்களின் வகுப்பறை ...!

வித்யாக்களின் வகுப்பறை ...!
------------------------------
BY Raheema Faizal

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின்
வகுப்பறை .....!
பூக்கள் நிறைந்த அல்லது குழந்தைகளின்
அட்டைப்படமிட்ட கொப்பிகளும்.....!

"படிக்கும் போது தூக்கம் வராமலிருக்க
என்ன செய்யலாம் ரீச்சர்..?? "
என்ற கேள்விகளும்....!

புதிதாய்ப் படிக்கப் படிக்க...:
முன்னாலுள்ளதெல்லாம்
மறக்கிறதே என்கிற கவலைகளும்....

பரீட்சையில் கூடுதல் புள்ளிகள் பெற வேண்டும்
என்கிற போராட்டங்கள் ....
பெரிய பெரிய கனவுகள் ...
கொப்பிகளுக்குப் பின்னாலிருக்கும்
பிடித்தமான
பாடல் வரிகள்....!
அழகழகான சிரிப்பொலிகள் -என பெண்பிள்ளைகள் நிறைந்த
எல்லா வகுப்பறைகளையும்
வித்யா - நீயே
வியாபித்திருக்கிறாய்...!!!!

எல்லோரும் ஆட்டோக்களில்
அடைபட்டு வருகையில் ...
துணிந்து சைக்கிளில் வரும்
இப்திஹாஜும்...!!!

ஒரு மார்க் குறைந்தாலும்
சிணுங்கித் திரியும் 'அஷ்பா'வும்
கணக்குப் பாடம் ஏறவில்லை என
தலையைப் பிய்க்கும் "ஷும்றா " வும்
வட்டமாய் சிரித்த முகமாய்
சாயலில் "அஷ்ரிபா" வும் - என

என் வகுப்பு மாணவிகளின்
எல்லா செயல்களிலும்
நீ வந்து நினைவில் நிற்கிறாய்...!

வித்யா- நீ
விடைபெற்று விட்டாய் !
நாங்கள் விடையே தெரியாமலிருக்கிறோம்...
பெண்ணாகப் பிறந்ததால்
பெண் பிள்ளைகளோடு பிறந்ததால்
பெண் குழந்தையைப் பெற்றிருப்பதனால்.....!

உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ...
உன் உயிர் குடித்த மிருகங்களின்
தாயாய் ...
மனைவியாய்...
சகோதரியாய் ....
உணர்ச்சியுள்ள நிறைய்யப்பெண்கள் இருக்கிறார்கள்....
மிருகங்களைப்பெற்றெடுத்ததர்காய்...
மிருகங்களுக்கு வாழ்கைப் பட்டதற்காய்...
மிருகங்களோடு பிறந்ததற்காய்
அவர்கள் அழுவார்கள்....!!!
தலையிலடித்துக் கொண்டும்
மார்பிலடித்துக் கொண்டும்
நினைவு வரும் போதெல்லாம்
நெஞ்சு வெடித்து ...
உனக்காக அழுவார்கள்...!!!!

போதை ஏற்றப்பட்ட
பத்துப் பத்துவெறிநாய்கள் கொண்ட கூடுகளில் ...
வாயும் கைகளும் கட்டப்பட்டவர்களாய்
அவர்களை
தனித்தனியே அடைத்துவைத்தாலும்....
தனித்து நின்று- நீ
போராடி உசிர்விட்ட வலிக்கு
ஈடாகாது....!

ஒரு நொடி வலியில்..
பொசுக்கென்று உசிர்போகும்
தூக்குத் தண்டனைகள்மீதெல்லாம்
எனக்கு உடன்பாடில்லை ...

பெரிதாய் அதைவிடப் பெரிதாய்
அவர்கள் உயிர்பிரியட்டும்....
போதை என்றும் ..
குடி வெறி என்றும்...
பணம் ,அரசியல் பலமிருக்கு...!
எனும் - திமிர் இருக்கும்
எல்லா ஆண்களும்
பயத்தில் உறையும்படி....!!

அப்போதாவது
மிச்சமிருக்கிற பெண்களின் உயிருக்கும்....
கனவுகளுக்கும்
சுதந்திரமாய் கதவுகள் திறக்கட்டும்....!!!
இன்றே இணைவோம்
ஒன்றாய்ப் பிரார்த்திப்போம்...!!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -