உண்மைக்கும் நேர்மைக்கும் தூரநோக்கிற்கும் கிடைத்த வெற்றியே தங்களுக்கான முதலமைச்சர் பதவியாகும்.இந்த பதவியின் மூலம் ஏழைகளின் வாழ்வில் எழுச்சி கிடைக்க தங்களை வாழ்த்துகின்றேன் என தெரிவித்து கல்முனை மாநகரசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஹாபிஸ் நஸிர் அஹமட் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது :-
சாணாக்கியம்,தீர்க்க தரிசனம் நிறைந்த எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கட்சியின் பரவலாக்கம் பற்றியும்,உயர்பீடத்தினதும்,கிழக்கு மாகாண உறுப்பினர்களினதும் பூரண அனுசரணையுடனும் தங்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க தீர்மானித்ததையிட்டு நான் மன மகிழ்ச்சியடைகின்றேன்.
அரசியலுக்கு அப்பால் மக்கள் நேயப்பணிகளை மனம் கோணாது என்றுமே மக்களின் காலடிக்குச்சென்று செய்து வரும் தங்களைப்போன்ற சமூக சேவையாளனுக்கு இவ்வுயரிய அந்தஸ்த்துமிக்க பதவி கிடைப்பதன் மூலம் ஏழைகளின் வாழ்வில் நல்ல எழுச்சி கிடைக்கும் என திடமாக நம்புகின்றேன்.
மேலும் தங்களுடைய பதவிக்காலத்தில் கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களும்,எமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளும்,கட்சிப்போராளிகளும்,நீதமாக நடத்தப்படுவார்கள் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த நம்பிக்கை வெற்றிபெறவும்,தங்கள் பணி மேலும் சிறக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திற்கின்றேன். என அந்த வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.