இர்ஸாத் ஜமால்தீன்-
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் மிக நீண்ட நாள் தேவையாக நிலவிவந்த இரத்த வங்கி இன்மையானது நேற்றுடன்( 23) நிறைவிற்கு வந்துள்ளது.
வைத்தியசாலைக்கு தனது விஜயத்தினை மேற்கொண்ட சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.டீ ஹஸன் அலி அவர்களால் இரத்த வங்கி திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாசித் உட்பட சுமார் 30க்கு மேற்பட்டவர்கள் தங்கள் உதிரத்தை இரத்த வங்கிக்கு நன்கொடையாக வழங்கினர்.
திறந்து வைப்பு வைபவத்தில் உரை நிகழ்த்திய வைத்திய அதிகாரி ஏ.எம். இஸ்ஸதீன் அவர்கள், இரத்த வங்கி திறப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்ட போதும் இரத்த வங்கி முகாமையாளர் இன்மையானது எமது முயற்சிக்கு தடையாக இருந்து வந்தது.
இத்தடையினை தகர்த்தெரிவதற்கு எமது பிரதேச வைத்தியர்களை அணுகி அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கூறியபோது அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இன்று திறக்கப்பட்ட இரத்த வங்கியானது என்றோ திறக்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.
இப்பிரதேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு சகல பயிற்சிகளையும் நிறைவு செய்து இரத்த வங்கியின் முகாமையாளராக கடமையாற்ற முன்வந்திருக்கும் மொனராகலையை சேர்ந்த வைத்தியர் அமோனா அவர்களுக்கு மக்கள் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்தார்.
இவ் இரத்த வங்கி திறப்பதற்கு அயராது உழைத்த பிரதேச சபையினர்களுக்கும், வைத்திய சாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கும் தனது நன்றியினையும் தெரிவித்தார்.