இன,மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் கூட்டாகப் போராடி நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது போன்று நாட்டில் அனைத்து இன மக்களும் தமது வாக்குப் பலத்தின் மூலம் நல்லாட்சிக்கு வித்திட்டுள்ள சந்தர்ப்பத்தை நிரந்தர சமாதானத்திற்கும் சமத்துவமான வாழ்வுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்கு இன்றைய சுதந்திர தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
ஏகாதிபத்திய நாடுகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக பெரும்பான்மை சிங்களவருடன் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினரும் இணைந்தே போராடினர். எனினும் அதன் மூலம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் காலத்திற்கு காலம் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களினால் சிறுபான்மையினர் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு அவர்களது உரிமைகள், அபிலாஷைகள் மறுக்கப்பட்டு வந்துள்ளன.
இதன் காரணமாக ஆயுதப் போராடம் வெடித்து நாடு பல்வேறு வகையிலும் அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்தது. பின்னர் முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு- நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை.
அதேவேளை கடந்த கால் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. முஸ்லிம்களின் சமய, கலாசார உரிமைகள் பாதிக்கப்பட்டதுடன் அவர்களது இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டு மக்கள் தமது வாக்குப் பலத்தின் மூலம் ஜனநாயக ரீதியாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
எவ்வாறு அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராடி ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை நாட்டில் இருந்து வெளியேற்றினரோ அவ்வாறே அனைத்து இன மக்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்தி ஜனநாயக் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன் மூலம் தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியை ஸ்திரப்படுத்தி நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக வாழ்வதற்குமான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)