கல்முனை மாநகர சபை உறுப்பினர் IP றஹ்மான் ஜனாதிபதி தேர்தல் பற்றி வழங்கிய நேர்காணல்

னாதிபதி தேர்தல் குறித்து கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இசட்.ஏ.எச்.றஹ்மான் வழங்கிய நேர்காணல்:

நேர்காணல்:- ஏ.எல்.எம்.சினாஸ்

கேள்வி: மூன்றாவது தடவையாகவும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த நாட்டில் 30 வருடங்களாக புரையோடிப்போயிருந்த யுத்தத்தினால் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் ரீதியாக சகல இன மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இன்னிலையை மாற்றி சுதந்திரமாக எங்கும் எப்போதும் சென்று வரலாம் என்ற நிலைக்கு தாய் நாட்டை மீட்டுத்தந்த தலைவர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. அதுமட்டுமல்லாது பாதாள கொஸ்டியை முற்றாக ஒழித்து நிம்மதியான சூழலை தோற்றுவித்த அரசியல் தலைவர். இன்று இன,மத,மொழி வேறுபாட்டை கடந்து போக்குவரத்துத் துறையிலே அதிவேக நெடுஞ்சாலையை உருவாக்கி கிராமம் - நகரத்துக்கிடையிலான இடைவெளியை குறைத்த தலைவர் எனவே மூன்றாவது தடவையாகவும் இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான் வரவேண்டும்.

கேள்வி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்க வில்லை. இம்முறை அரசுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்கின்றீர்களா? 
 
பதில்: 2005,2010 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டனர். இப்படி செயற்பட்ட இவர்களுக்குத்தான் அமைச்சுப்பதவிகளையும் அரச உயர் பதவிகளையும் அபிவிருத்தியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்தார். 

எனவே மதில் மேல் பூனையாக இருக்கும் நிலையை மாற்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையற்ற முறையில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்கின்றேன்.

கேள்வி: கல்முனை தொகுதியில் அதிகமான அபிவிருத்தியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றனர் இதுபற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: கல்முனை தொகுதிக்கு 447 மில்லியன் ரூபாக்களை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ ஊடாக ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இதன்மூலம் இன்று அடிக்கல் நாட்டுபவர்களாகவும் அதிதிகளாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் எம்.பி மார்களும் வலம்வருகிறார்கள். வீதிகளில் சென்று பார்க்கின்ற போது இவர்களின் புகைப்படங்களை காணக்கூடியதாக உள்ளது. இதற்கான பணத்தினை ஒதுக்கிக் கொடுத்தவர் யார்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான். 

திவிநெகும திட்டத்தின் கீழ் திவிநெகும உதவிபெறும் குடும்பங்களுக்கு ரூபா.2500.00 கடந்த 2014.11.18 ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினத்தில் நாடு பூராகவும் வழங்கப்பட்டது. குறிப்பாக எமது பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பணங்களை வழங்கிவைத்தனர். இப்பணம் யாரால் ஒதுக்கப்பட்டது என்பது இந்த பிரதேச மக்களுக்கு நன்றாக தெரியும் பிரதேச மக்கள் முட்டாள்கள் அல்ல. 
எனவே இவ்வாறான ஒரு நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏழைகளின் தோழன் ஏன்? ஜனாதிபதியாக தெரிவு செய்யக்கூடாது. 

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறதே?

பதில்: கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மத்தியில் சில கசப்பான சம்பவங்கள் பற்றி நாம் அறிந்தோம். அதாவது பள்ளிவாசல்களுக்கு கல்லெறிந்தமை, இன முறன்பாடுகளை தோற்றுவித்தமை, 'அலுத்கம' பிரதேசத்தில் இடம்பெற்ற தீவைப்புச் சம்பவம் போன்றவை முஸ்லிம் மக்களின் மனங்களில் கசப்பான உணர்வுகளாகவே காணப்பட்டன. உண்மையில் இந்த சம்பவங்களை ஆராய்கின்ற போது வெளிநாட்டு சக்திகளும் உள்நாட்டு முகவர்களும் பின்னணியில் உள்ளனர். இது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசை கவிழ்க்க வேண்டும் என்று வெளிநாட்டு சக்திகள் கங்கனம் கட்டிக் கொண்டிருந்ததை நாம் அறியாமலில்லை. ஐ.நா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கொண்டுவந்து மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாமல் போனதும் வெளிநாட்டு சக்திகளுக்கு தோல்வியாக அமைந்தது எனக்கூறலாம்.

கேள்வி: அப்படி என்றால் பொதுபலசேன அமைப்பு பற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள்?

பதில்: நோர்வே அரசினதும் இன்னும் சில நாடுகளினதும் பின்னணியில் பொதுபலசேன என்ற அமைப்புக்கு பண உதவிகள் வழங்கப்பட்டதாக பேசப்பட்டது.

 இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற பெளத்த மத தலைவர்களைக் கொண்டு பெளத்தர்களிடையே பிரச்சினைகளை உருவாக்கி அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியை கவிழ்பதற்கான சூட்சுமம் தான் இந்த பொதுபலசேனவின் அரங்கேற்றம்.

இந்த முஸ்தீபுகள் இலங்கை தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற செய்திகள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களுக்கு கிட்டியது. அதுவரை அறிந்திராத பாதுகாப்பு செயலாளர் பின்னர் உண்மையை அறிந்து கொண்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான பொதுபலசேன அமைப்பின் நடவடிக்கைகள் அரசுக்கு திரிசங்க நிலையை ஏற்படுத்தியது. அவ்வேளையில்தான்; அரசியல் இலாபத்துக்காக சில முஸ்லிம் தலைவர்கள் விடயங்களை பெரிதுபடுத்தினார்கள். இதுதான் உண்மை.

கேள்வி: தற்போது எதிரணியினரின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டிருக்கிறாரே இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: மைத்திரிபால அல்ல யார் வந்தாலும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தோற்கடிக்க முடியாது. இருவரையும் ஒரு தராசியில் வைத்துப்பார்த்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தான் படித்தவரும் பாமரமகனும் ஆதரிப்பார்கள். அண்மையில் அமெரிக்கா திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் சந்திரிக்கா அம்மையார் அவர்களையும் லண்டனில் சந்தித்தமையை பத்திரிகை வாயிலாக அறிந்தோம். இதுவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியை கவிழ்பதற்கான வெளிநாட்டு சக்தியின் ஒரு முயற்சியாகும்.

எதிரணிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர் கிடைக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டிலே என்னைப் பொறுத்தவரையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகராக இன்னுமொரு தலைவர் இல்லை என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி: அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தற்போதிருக்கும் மக்கள் ஆதரவு குறித்து என்ன நினைக்கின்றீர்hள்?

பதில்: கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டார் இதில் ரணில் விக்கிரமசிங்க 4706366 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4887152 வாக்குகளையும் பெற்று 50.29 வீதத்தால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

மீண்டும் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார் இதில் சரத் பொன்சேகா 4173185 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 6015934 வாக்குகளையும் பெற்று 57.88 வீதத்தால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். மீண்டும் 2015ல் 55 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது தடவையாகவும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பது உறுதி.

எனவே இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இன்னுமொரு பயங்கரவாதம் உருவாவதை தடுப்பதாயின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதை தவிர வேறுவ வழியில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :