எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று நடைபெற்ற தேசிய தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பில் தமது கட்சியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியை சந்தித்த போது மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததோடு மலையகத்திற்கு மேலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக திகாம்பரம் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 50,000 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை 3 வருடங்களில் செய்து முடிப்பதாக ஜனாதிபதி அறித்ததை வரவேற்றுள்ள திகாம்பரம், அந்தத் திட்டத்தை இன்னும் விரைவில் செய்து முடிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளித்து சில மலையகத் தலைவர்கள் மக்களை ஏமாற்றுவதாகவும் ஆனால் நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க தான் தயார் இல்லை என்றும் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் மலையக மக்களின் வீடு, காணி உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கவுள்ளதாகவும் அதற்கு மக்கள் தமக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் திகாம்பரம் கேட்டுக் கொண்டார்.

0 comments :
Post a Comment