ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து சலுகை என்ற அடிப்படையில் இலஞ்சமாக வழங்கப்பட்டதே 2015 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டமாகும். குறித்த திட்டத்தினூடாக உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் ஒருபோதும் நிறைவேற்றப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தினூடாக 46 சதவீதத்தினை ராஜபக் ஷ குடும்பத்தினரே பங்கு கொண்டுள்ளனர். மேலும் கடனுக்கு மேல் கடன் வாங்கி பாரத்தை மக்கள் மீது சுமத்தும் வரவு செலவுத் திட்டத்தையே அரசு இம்முறையும் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமை காரியாலயத்தில் நேற்று
இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
உற்பத்தியை கொண்டு வருமானத்தை அதிகரிக்கும் வரவு செலவுத்திட்டத்திற்கு பதிலாக கடனுக்கு மேல் கடன் பெறும் வரவு - செலவு திட்ட அறிக்கையையே அரசு இம்முறையும் சமர்ப்பித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உபதேசத்திற்கு அமையவே இந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பற்றாக்குறையின் தொகையை அதிகரித்துள்ளது. அத்தோடு இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக 840 பில்லியன் ரூபா கடன் தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே கடன் தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு பதிலாக மேலும் கடனை பெறவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதற்கமைய குறித்த கடன் தொகையை மக்களே செலுத்த வேண்டியுள்ளது.
அத்தோடு இவ்வருடத்தை போன்று மறைமுகமாக கடன் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதாவது அபிவிருத்தி என்ற பெயரில் அமைச்சுக்களினூடாகவும் வங்கிகளினூடாகவும் கடன் பெறவுள்ளது. எனவே குறித்த கடனை அரசு கடன் தவணை கொடுப்பனவில் இணைக்கவில்லை. ஆகவே தவணை கொடுப்பனவு 840 பில்லியன் என்பது தவறானதாகும்.
மேலும், அரசு பலவந்தமான முறையில் வங்கிகளிடமிருந்து கடன் பெறவுள்ளது. இதனால் வங்கிகளுக்கே நஷ்டம் ஏற்படும். இவ்வாறான நிலைமைதான் தேசிய சேமிப்பு வங்கிக்கு இவ்வருடம் ஏற்பட்டது.
எனவே, சலுகை என்ற அடிப்படையில் பல்வேறு வாக்குறுதிகளை அரசு இவ்வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கியுள்ளது.
அதுமாத்திரமன்றி இந்த திட்டத்தில் 46 சதவீதத்தை ராஜபக் ஷ குடும்பத்தின் அண்ணன், தம்பிகளே பங்கு கொண்டுள்ளனர். இதற்கமைய நிதி அமைச்சுக்கு 9.98
சதவீதமும் பாதுகாப்பு அமைச்சுக்கு 15.73 சதவீதமும் பொருளாதார அமைச்சுக்கு 6 சதவீதமும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சிற்கு 3.17 சதவீதமும் அதிவேக நெடுஞ்சாலை அமைச்சுக்கு 11 சதவீமுமாக 46 சதவீதத்தினை ஜனாதிபதியும் பசில் ராஜபக் ஷவுமே பகிர்ந்து கொண்டுள்ளனர். இருப்பினும் ஏனைய கபினட் அமைச்சர்கள் 65 பேரிற்கு 53 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் கடற்றொழில் அமைச்சிற்கு 0.3 சதவீதமே ஒதுக்கப்பட்டது. விவசாயத்திற்கும் சுகாதாரத்திற்கும் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை விட குறைவாகவே ஒதுக்கிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த திட்டமானது தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இலஞ்சமாக வழங்கப்பட்டதாகும். 2005 இலிருந்து உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் மேடையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியொன்றல்ல. இது பாராளுமன்றில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள். இந்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment