அரசாங்கத்தில் இருக்கும் கூட்டுக் கட்சிகளின் முரண்பாடுகளே ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தின் வீழ்ச்சியினை உறுதிப்படுத்துகின்றது.
சட்டவிரோதமான தேர்தலை நடத்தி அரசாங்கம் வெல்லலாம் என பகல் கனவு காண்கின்றதென விமர்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தினை வீழ்த்துவதற்காக சகல எதிர்த்தரப்புடனும் கூட்டு சேரத் தயார் எனவும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க பங்காளிக் கட்சிகள் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை தொடர்பிலும் பொது எதிரணி தொடர்பிலும் வினவிய போதே ஜே.வி.பி. யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் பிரதான அமைச்சர்களும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசின் மீது அதிருப்தியிலேயே உள்ளனர். அரசாங்கத்தினுள் இருக்கும் கூட்டுக் கட்சிகளின் முரண்பாடான கருத்துக்களும் உறுதியற்ற வாக்குகளும் அரசாங்கத்தின் மீதான தோல்வியினை உறுதிப்படுத்துகின்றது.
எனினும் ஜனாதிபதியின் தனிப்பட்ட நோக்கத்திற்காகவும் சுயநலத்திற்காகவுமே இம்முறை ஜனாதிபதி தேர்தலை நடத்துகின்றார். எனவே இதில் சட்டத்திற்கு முரணாக தேர்தலை நடத்துவதும் மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதும் அரசாங்கத்தின் வெற்றியினை உறுதிப்படுத்தாது.
எனினும் மக்களை ஏமாற்றி அதேபோல் அரச உடமைகளையும் இராணுவத்தினையும் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்ததை வெற்றி கொள்ளலாம் என நினைப்பது வெறும் பகல் கனவே. அது இம்முறை பலிக்கப் போவதில்லை.
மேலும், அரசாங்கம் சட்ட விரோதமாக நடாத்தும் இவ் தேர்தல் தொடர்பில் நாடு பூராகவும் மக்களை ஒன்று திரட்டி அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை செய்வோம். நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக நாம் எம்மால் முடிந்த சகல முயற்சிகளையும் எடுத்து அரசாங்கத்திற்கு சவால் விடுப்போம்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளும் அரசாங்கத்தின் கொள்கைகளும் ஒரு கோட்பாடாகவே நாம் கருதுகின்றோம். மக்கள் விடுதலை முன்னணி இக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் நாம் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி அதற்காகப் போராடுகின்றோம்.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் இந்த அராஜக அரசாங்கத்தினை வீழ்த்தி நாட்டை கட்டியெழுப்பவும் மூவின மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் நாம் பொது எதிரணியுடன் கைகோர்க்கவும் ஆயுத்தமாகி வருகின்றோம்.
சகல எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கொள்கையினை கட்டியெழுப்பி அதனூடான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப நாம் எதிர்க்கட்சிகளுடன் ஒரே மேடையில் பலமடையத் தயார். ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக கட்சி மற்றைய முஸ்லிம் கட்சிகளும் இவ் ஒருமித்த கொள்கைக்கு தயார் எனின் நாமும் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment