இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தம் நடந்து முடிந்தும் ஏன் இந்த யுத்தம் நடந்தது என்பது பற்றி அரசுக்கு தெரியாமலுள்ளது. காரணமறிந்து சரியான தீர்வுகளைக் காணாத வரை இந்த நாடு சுடுகாடாக மாறுமென்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி எச்சரிக்கை விடுத்தார்.
நிந்தவூர் பெஸ்ட் ஒப்யங் சமூக சேவை அமைப்பு நடத்தும் நெனசல அறிவகத்தில் கணினி பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நெனசல அறிவக முகாமைத்துவ பணிப்பாளர் ஏ. புஹாது தலைமையில் நிந்தவூரிலுள்ள மவட்டதொழிற்பயிற்சி நிலைய மண்டபத்தில் விழா நடைபெற்றது.
விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம் (மு.கா),
ஏ.டபிள்யூ.பி.என். மஞ்சுள பெர்னாண்டோ (ஐ.தே.க.) ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். சமீம், நிந்தவூர் அல்- மதீனா மகா வித்தியாலய அதிபர் எஸ். அகமது ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹஸனலி தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தம் நடந்து முடிந்தும் ஏன் இந்த யுத்தம் நடந்ததென்பது அரசாங்கத்திற்குத் தெரியாமலுள்ளது.
ஏன் இந்த யுத்தம் நடந்தது? எப்படி யுத்தம் ஆர்பித்தது? என்ற பிரச்சினைகளைத் தேடி அதற்கான சரியான காரணங்களைக் கண்டு அக்காரணங்களுக்கு சரியான தீர்வுகளைக் காணதவரை இந்த நாடு சுடுகாடாக மாறுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இன்று இந்த நாட்டில் சமூகங்களை வழிநடத்த வேண்டிய விழுமியங்கள் யாவும் கெட்டுப் போயுள்ளன. இன வாதம் அரசாங்கம் அரசிலுள்ள சில அமைச்சர்கள் சில அரசியல் கட்சிகள் என சமூகத்தை வழி நடத்த வேண்டிய விழுமியங்களனைத்தும் கெட்டுப் போயுள்ளன. இதை அரசு புரிந்தும் புரியாமல் நடத்துகொண்டிருக்கின்றது.
சிறுபான்மை
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் அச்சம் பீதியடையும் வகையில் மோசமான இனவாத போக்குடைய நாடாக இந்த நாடு இன்றுள்ளது.
ஒரு முஸ்லிமைக் கண்டால் அவன் தலிபான் அல்லது அல் கைதா அமைப்பு என்பதும் ஒரு தமிழரைக் கண்டால் புலிகளமைப்பு என்பதும் இன்று இனவாதம் கக்குவோரின் வழக்கமாகிவிட்டது.
குதறல்
ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடக்கப்போகிறது என்றாலே சிலருக்கு மட்டுமன்றி சில சிங்கள ஊடகங்களுக்கும் அடி வயிற்றைக் கலக்குகின்ற நிலமை இன்றுள்ளது.
ஏதோ இணைந்து தேர்தல் கேட்கப் போவதாகவும் தனி நாடு தமிழ் நாடு கோரப் போவதாகவும் சிங்கள சமூகத்திற்கு எதிராக அணிதிரளப் போவதாகவும் கற்பனை செய்து கொள்கின்றனர். விஷமத்தனத்துடன் நோக்குகின்றனர்.
நாம் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் ஒரே பிராந்தியத்தில் வாழ்கின்றோம். பக்கத்து வீட்டுக்காரருடன் நாம் பேசினால் அது பிழையான விடயமாகுமா? திட்டமிட்ட சதியாகுமா?
ஒற்றுமை
இன்றைய நிலையில் வடகிழக்குப் பிராந்தியத்தில் இனத்துவேசங்களைக் களைத்து விட்டு நாம் தமிழ்பேசும் மக்களென்ற வரையறைக்குள் ஒற்றுமையாக சிந்துத்து இதய சுத்தியுடனும் வேறுபாடுகளை மறந்தும் ஒற்றுமைப்படவேண்டும்.
இந்த ஒற்றுமை உறுதியாகவிருந்தால் மட்டும் தான் இப்பிராந்தியத்தின் மீது பிரயோகிக்கக் கூடிய வெளியிலிருந்து வரக் கூடிய அழுத்தங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
முஸ்லிம்கள்
இன்று நாட்டில் தலைவிரித்தாடும் பௌத்த இனவாத வெறித்தனங்கள் காரணமாக அரசிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென முஸ்லிங்கள் எதிர்பார்க்கும் நிலைமையுள்ளதென்றால் நாட்டின் நிலமை எவ்வளவு மோசமாகவுள்ளதென்பது தெளிவாகின்றது.
நாட்டில் அரசு கண்டு கொள்ளமுடியாமலிருக்கும் கட்டுப்படுத்த முடியாமலிருக்கும் சிங்கள மேலாதிக்க குழுக்களின் கட்சிகளின் செயற்பாடுகள் முஸ்லிங்களை விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.
இதன் ஓர் எதிரொலியாகவே ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். முஸ்லிம்களுக்கு எழுந்துள்ள அரசு மீதான கோபமும் வெறுப்பும் இந்த அரசுக்கு இன்னும் புரியாமலேயுள்ளது.
எமது அடையாளத்தையே கேள்விக்குட்படுத்துமளவுக்கு இந்த நாட்டில் சில சக்திகள் மேலோங்கியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இனங்களுக்கிடையிலான இத்தகைய வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையான ஒரு சமூகத்தை இந்த நாட்டில் உருவாக்க வேண்டிய பொறுப்பை அரசு உணர்ந்து செயற்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :
Post a Comment