பதுளை ஜூம்ஆ பள்ளிவாசல், அல்-அதான் வித்தியாலயம் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதலும், முச்சக்கர வண்டியொன்று நொருக்கப்பட்டதும், இளைஞர்கள் ஐவர் தாக்கப்பட்டதும் தேர்தலையொட்டிய நடவடிக்கைகளாகத் தோன்றவில்லையென்றும், அத் தாக்குதல்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கும்பல் மேற்கொண்டவையாக இருக்கலாமென்று கூறப்படுவதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.
நேற்றிரவு நடைபெற்ற இச் சம்பவங்களை அடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஆகியோர் பள்ளிவாசல் தலைவரையும், பாடசாலை அதிபரையும் நேரில் சென்று சந்தித்து நிலைமையை ஆராய்ந்துள்ளனர். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவங்களின் பின்னணி பற்றி இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் மிகவும் நெருங்கி வரும் இச் சந்தர்ப்பத்தை இனவாதிகள் தங்களுக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்தி இவ்விதமான விஷமச் செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸார் துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தாம் ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டதை அடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதாக அவர்
உறுதியளித்தாக ஹஸன் அலி எம்.பி கூறினார்.
தற்சமயம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஈரானில் நடைபெறும் நீதியமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆசிய - ஆபிரிக்க நாடுகளின் சட்ட ஆலோசனை மன்ற மாநாட்டில் பங்கேற்றிருப்பதாகவும், அவருக்கு இங்குள்ள நிலைமை குறித்து அறிவிக்கப்பட்டதாகவும் ஹஸன் அலி எம்.பி. மேலும் கூறினார்.

0 comments :
Post a Comment