அரசாங்கம் வழி மாறிச் செல்வதாக ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் ஒரு சில நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சியினால் முன்வைக்கப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய மரியாதை அளிக்கத் தவறிமை உள்ளிட்ட சில முக்கிய காரணிகளினால் ஆளும் கட்சியில் ஊவா மாகாணசபைக்கான வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என தீர்மானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கு சிறு கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர் குழுவொன்றை நியமித்தமை போன்ற தீர்மானங்கள் குறித்து கட்சிக்கு எவ்வித் அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.என்.பி.யை விட்டு விலகி ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட உறுப்பினரை எவ்வித மறுப்பும் வெளியிடாது ஏற்றுக்கொண்டமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். உறுப்பினரை இணைத்துக் கொள்ள வேண்டாம் என கோரியிருந்த போதிலும், அது குறித்து கவனம் செலுத்தாமை, ஜே.என்.பி.யை விடவும் தனியொருவர் முக்கியம் என்பதனையே புலப்படுத்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் மெதுவாக தங்களை பலப்படுத்திக்கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் எதிர்க்கட்சிகள் வலுப்பெறுதனை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக போராடுவது சுலபமானதல்ல எனவும், அதனையே தாம் இப்போது செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை விட்டு வெளியேறி குற்றச்சாட்டுக்களை சுமத்துவது சுலபமானது என்ற போதிலும் அதன் மூலம் நன்மை கிட்டாது என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :
Post a Comment