பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 16வது வலய மட்ட விளையாட்டு விழா 09-05-2014 நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில்; இடம்பெற்றது.
மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வி.தவராஜா,மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் ரி.வாசுதேவன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜா உட்பட கோட்டக்ககல்விப் பணிப்பாளர்கள் ,பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் முதலாம்,இரண்டாம்,மூன்றாம் இடங்களை பெற்ற கோட்டங்களுக்கான கிண்ணங்களை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் வழங்கி வைத்தார்.
இங்கு மாணவர்களின் வண்ண அணி வகுப்பு மரியாதை உட்பட மாணவர்களின் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கால்பந்தாட்டத்துறையில் தேசிய ரீதியில் சாதனைபடைத்த மூத்த விளையாட்டு வீரர் திருவாளர் என்.ரட்ணசிங்கத்திற்கு அவரின் சேவையை பாராட்டி கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாமினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டது.
நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் மண்முனை வடக்கு கோட்டம் 2318புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தினையும் ஏறாவூர்பற்று 912புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தினையும் மண்முனைப்பற்று கோட்டம் 399புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
பாடசாலைகளின் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் சிவானந்தா தேசிய பாடசாலை 425புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தினையும் தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயம் 214புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தினையும் புனித மைக்கேல் கல்லூரி 174புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
பெண்கள் பாடசாலைகளின் அடிப்படையில் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் 340புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தினையும் புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 250புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தினையும் மஹாஜனாக்கல்லூரி 240புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சம்பியன்களாக ஆண்கள் பிரிவில் 15வயதுக்குட்பட்ட பிரிவில் கல்லடி விபுலானந்தா வித்தியாலய மாணவன் ஆர்.சஞ்சயகாந், 17வயதுக்குட்பட்ட பிரிவில் சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் மிதுர்ஷ் , 19வயதுக்குட்பட்ட பிரிவில் தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தினை சேர்ந்த மரியஜனராஜ், 21வயதுக்குட்பட்ட பிரிவில் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தினை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த ஆண்டுக்கான சம்பியன்களாக பெண்கள் பிரிவில் 15வயதுக்குட்பட்ட பிரிவில் புனித சிசிலியா பெண்கள் பாடசாலையை சேர்ந்த மாணவி எல்சிடெனிலா, 17வயதுக்குட்பட்ட பிரிவில் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவி பி.கிருத்திகா, 19வயதுக்குட்பட்ட பிரிவில் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவி பி.சோபனா, 21வயதுக்குட்பட்ட பிரிவில் தன்னாமுனை புனித வளனார் வித்தியாலத்தினை சேர்ந்த மாணவி ஜே.லிவியா ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)








0 comments :
Post a Comment