அஸ்லம் எஸ்.மௌலானா-சாய்ந்தமருது நகரில் கடந்த மூன்று வருடங்களாக பழுதடைந்து ஒளிராத நிலையில் காணப்பட்ட நவீன சோடியம் மின் விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகேவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையினால் இத்திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான நவீன உயர்த்தி கொண்டு வரப்பட்டு அதன் உதவியுடன் மாநகர சபை மின்சாரப் பிரிவு ஊழியர்களால் இத்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பயனாக கடந்த மூன்று வருடங்களாக இருள் சூழ்ந்து காணப்பட்ட சாய்ந்தமருது நகரின் பிரதான நுழைவாயில் தொடக்கம் வொளிவோரியன் சந்தி வரையான பகுதியில் அமைந்துள்ள சோடியம் மின் விளக்குகள் மீண்டும் ஒளிர்வு கொடுக்கின்றன.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் நேரடி மேற்பார்வையில் இடம்பெற்ற இத்திருத்தப்பணி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எச்.எம்.நபார், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தான் முதல்வராக பதவியேற்றது தொடக்கம் இத்திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கான நவீன் உயர்த்தியைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே தனது நிறுவனத்திற்கு சொந்தமான நவீன உயர்த்தியை குறித்த வேலையை செய்வதற்காக எமக்கு இலவசமாகத் தருவதற்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே முன்வந்திருந்தார் என முதல்வர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
இதற்காக அவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி அனோமா கமகே மற்றும் எமது மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எம். நபார் ஆகியோருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
அதேவேளை சாய்ந்தமருது நகரின் சாஹிரா வீதிச் சந்தி தொடக்கம் அல்ஹிலால் பாடசாலை வரையான பகுதிக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முதல்வர் நிசம் காரியப்பரின் விசேட திட்டத்தின் கீழ் சுமார் 50 புதிய சோடியம் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வெளிச்சமூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment