நான் உரையாற்றுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கத் தவறினால் உங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன் என வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்ஸா சபைக்குத் தலைமை தாங்கிய ஆளும் கட்சி எம்.பி. உதித்த லொக்கு பண்டாரவுக்கு மிரட்டல் விடுத்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே எதிர்க்கட்சி எம்.பி. க்களால் இடையூறு விளைவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் மேற்கண்டவாறு மிரட்டல் விடுத்தார்.
அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சுஜீவ சேனசிங்க எம்.பி. ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை சில கருத்துக்களை முன்வைத்தார்.
எனினும் அது ஒழுங்குப் பிரச்சினையுடன் தொடர்புபட்டதல்ல என்று சபைக்குத் தலைமை தாங்கிய உதித்த லொக்கு பண்டார எம்.பி. குறிப்பிட்டார்.
இதனையடுத்து அமைச்சர் சொய்சா உரையாற்ற முற்படுகையில் மீண்டுமொரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பப்பட்டது.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தயாசிறி ஜயசேகர எம்.பி. அம்பாந்தோட்டை விமான நிலையம் தொடர்பில் சில கருத்துக்களை முன்வைத்தார்.
எனினும் அதுவும் ஒழுங்குப் பிரச்சினையுடன் பொருந்தவில்லை என அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் ஆவேசம்
இதனையடுத்து ஆவேசமடைந்த அமைச்சர் சொய்சா, நான் உரையாற்றுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கத் தவறினால் உங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுப்பேன் என உரத்த குரலில் கூறினார். அவ்வாறு கூறியதுடன் உரையையும் தொடர்ந்தார்.
0 comments :
Post a Comment