ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அலிக்கம்பை கிராமத்துக்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சின் 'விதுலமு லங்கா' எனும் திட்டத்துக்கு அமைவாக 34 மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் வழங்கும் நிகழ்வு நேற்று 31.12.2012 இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பிரசேனவின் செயலாளர் ரி. ஜெயாகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், உணவுப் போசாக்குத் துறை சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரட்ண மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு மின் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
அமைச்சர் தயாரட்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஆகியோர் எடுத்துக்கொண்ட பெரு முயற்சியின் பயனாகவே அலிக்கம்பைக் கிராமத்துக்கான இந்த மின்சாரத் திட்டம் மிக விரைவாக பூர்த்தி செய்யப்பட்டது.
இதேவேளை, எதிர்வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்பாக, அலிக்கம்பைக் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று, நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன இதன்போது உறுதியளித்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஆலையடி பிரதேச சபையின் தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன இருந்தபோது, அலிக்கம்பைக் கிராமத்துக்கு மின்சாரம் வழங்குவதற்கான திட்டத்தினை உருவாக்கி அதற்கான அங்கீகாரத்தினை அப்போதைய பிரதேச சபையில் பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றைய மின்சாரம் வழங்கும் நிகழ்வில், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ஜி.டப்ளியு. சுனில் சந்ரலால், வி. ஜெயச்சந்திரன், பங்குத் தந்தை யோசப் மேரி சுவாமிகள், அக்கரைப்பற்று மின் அத்தியட்சகர் என். நூறுல் ஹக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, அலிக்கம்பை இளைஞர் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்களை, நாடாளுமன்ற உறுப்பிர் பியசேன தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment