அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பிரதேசத்திலுள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்ற நிலையில் அவ்வைத்தியசாலை இயங்குவதையிட்டு இச்சபையில் கவலை தெரிவித்துக்கொள்கின்றேனென அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேசசபையின் வரவு - செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'அண்மையில் இவ்வைத்தியசாலைக்கு காலை 11.30 மணியளவில் நான் சென்றிருந்தபோது, 4 வைத்தியர்கள் கடமையாற்றகின்ற இவ்வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் கூட இல்லாதிருந்ததை நேரடியாக அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இவ்விடயத்தை அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.
ஆலங்குளம் மக்களுக்கு விசேடமாக அமைக்கப்பட்ட கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர் வராததால் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வைத்தியாலைக்குச் சென்று திரும்பவேண்டிய நிலையுள்ளது.
அவ்வாறே அம்பாறை மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நுரைச்சோலையில் அமைக்கப்பட்ட 500 வீடுகள் இன்னமும் இம்மக்களிடம் கையளிக்கப்படவில்லை. சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 8 வருடங்கள்; கழிந்துவிட்ட நிலையிலும் இவ்வீடுகளை மக்களிடம் கையளிக்க முடியாததையிட்டு வெட்கப்படுவதுடன் கவலையுமடைகின்றேன்.
எமது அம்பாறை மாவட்டத்தில் மத்திய மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் பலர் இருந்தும் இவ்விடயம் கவனிக்கப்படாதிருப்பது கவலைக்குரிய விடயம். இன்று இவ்வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை தொடர்பாக அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. எனவே, இவ்வீட்டுத்திட்டம் தொடர்பாக எமது அமைச்சர்கள் துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்' என்றார்.
TM
0 comments :
Post a Comment