ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் மாத்திரமல்ல. ஆளும் கட்சியினரும் கடுமையாக வெறுக்கிறார்கள். ஆகவே 2023ம் ஆண்டுக்குள் நிச்சயம் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்பதை உறுதியாக கூற முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்:-
கொரோனா வைரஸின் தாக்கத்தை அரசாங்கம் குறுகிய அரசியல் தேவைக்காகவும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முடக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறது. அரசியல் தேவைகளுக்காக சுகாதாரத் தரப்பினரை பயன்படுத்திக் கொள்வவது முற்றிலும் தவறானதாகும். அரச ஊழியர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய செயற்பட வேண்டிய தேவை கிடையாது.
ஊடக சுதந்திரம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தீவிரமடைத்துள்ளன. யுத்த காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதே தன்மை இப்போதும் தொடர்கிறது.
அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் உரிமை வர்த்தகர்கள் வசம் காணப்படுவதால் நுகர்வோர் பொருளதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளார்கள்
கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு மத்தியில் அரசாங்கம் ரகசியமான முறையில் தேசிய வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. தொழிற்சங்கத்தினர் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். தொழிற்சங்கத்தினரது போராட்டத்துக்கு முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் மாத்திரமல்ல, ஆளும் தரப்பினரும் வெறுப்புக்குள்ளாகியுள்ளார்கள். 2023ம் ஆண்டுக்குள் நிச்சயம் ஆட்சிமாற்றம் ஏற்படும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.