ஜனாஸாக்களை எரிப்பதை நாம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இது சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார துறையினரின் மிகப்பெரிய தவறு என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். இது தவறு என்பதை நாம் அரசின் அனைத்து உயர் மட்டத்துக்கும் எழுத்து மூலம் தெரிவித்துள்ளோம்.
இந்த விடயத்தில் அரசுக்கு சார்பான உங்களின் கருத்தை ஏன் அரசு ஏற்கவில்லை என பலரும் எம்மிடம் கேட்கிறார்கள்.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் தமது சார்பு மக்கள் பிரதிநிதிகளான எம் பீக்கள் உள்ள கட்சிகளின் கருத்துக்கே இடமளிக்கும். எம் பி அல்லாத சாதாரண கட்சிகளுக்கு அரசாங்கங்கள் இடமளித்ததாக இலங்கை வரலாற்றில் இல்லை. ஆனாலும் உலமா கட்சிக்கு மட்டுமே ஓரளவு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது இடமளித்தார். சமூகத்தின் சில கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்தார். பின்னர் முஸ்லிம்களின் வாக்குகள் பெரிதாக இல்லை என்று தெரிந்ததும் எமக்கு அரசில் போதுமான இடமில்லை என்பது உண்மை. சில வேளை மஹிந்த இப்போதும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் நிச்சயம் நாம் பலதை சாதித்திருப்போம்.
நமது முஸ்லிம் மக்களே வோட்டு இல்லாத கட்சிகளுக்கு இடம் தராத போது அரசு தரும் என எதிர்பார்ப்பதும் முட்டாள்தனமாகும்.
ஜனாஸா எரிப்பு விடயத்தில் ஹக்கீம் முதலில் நடந்து கொண்டமை பெரும் தவறு. அவர் ஒரு எம் பியாக அமைச்சராக, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் ஓட்டு பெற்ற கட்சி தலைவராக இருக்கும் நிலையில் இந்த விடயத்தை அணுகிய முறை பிழை என்பதை அப்போதே நாம் ஊடக வாயிலாக சுட்டிக்காட்டினோம். ஹக்கீமின் இடத்தில் ஒரு சாதாரண மீன் வியாபாரி தலைவராக இருந்தாலும் ஹக்கீமை விட திறமையாக இதனை கையாண்டிருப்பான்.
ஹக்கீம் என்ன செய்தார்? சாதாரண, மக்கள் செல்வாக்கே இல்லாத கட்சி போல் முகநூலில் எரிக்க கூடாது என அறிக்கை விட்டார். அதுவும் ஆங்கிலத்தில். அந்த அறிக்கை சாதாரணமாகத்தான் இருந்தது. பின்னர் அவரது ஆதரவாளர்கள் அந்த அறிக்கையில் இல்லாத வசனங்களை சேர்த்து கண்டன அறிக்கையாக தமிழில் வெளியிட்டனர். தமிழ் அறிக்கை சிங்களத்துக்கு மாற்றப்பட்டு அரசை ஆத்திரம் கொள்ளவைத்தது.
உண்மையில் ஹக்கீம் என்ன செய்திருக்க வேண்டும்?
ஹக்கீம் மக்கள் வாக்குள்ள கட்சியின் தலைவர் என்பதால், முன்னள் அமைச்சர் என்பதால் இது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முயற்சித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதாக பேஸ்புக் அறிக்கைக்கு முன் எந்த தகவலும் வெளிவரவில்லை.
நாங்கள் கூட ஜனாதிபதியை நேரடியாக சந்திப்பது கஷ்டம். காரணம் நாங்கள் முஸ்லிம்களின் ஆணை பெற்றவர்கள் இல்லை. ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சியாக நாம் இருந்தும் அவர் பதவியேற்றதிலிருந்து இன்று வரை அவரை சந்திக்க எமக்கு நேரம் தரப்படவில்லை.
ஆனால் ஹக்கீம் நினைத்தால் உடனடியாக ஜனாதிபதியை சந்திக்க முடியும். அப்படி செய்யவில்லை.
பின்னர் மஹிந்தவை சந்திக்க முயற்சி செய்தார். அப்போதும் அவர் என்ன செய்திருக்க வேண்டும்?
இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூக பிரச்சினை என்பதால் முதலில் ஆளுந்தரப்புக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளையும் ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளையும் கூட்டி ஆலோசித்திருக்க வேண்டும்.
அதன் பின் ஆளுந்தரப்பு முஸ்லிம் கட்சிகள், எதிர் தரப்பு முஸ்லிம் கட்சிகள் இணைந்து கூட்டாக இந்த விடயத்தை முதலில் ஜனாதிபதியுடனும் பின்னர் மஹிந்தவுடனும் பேசியிருக்க வேண்டும்.
ஆனால் ஹக்கீம் எரிப்பு விடயத்தில் தனது கட்சிக்கு அரசியல் லாபம் தேட முயற்சித்ததால்த்தான் அவரும் அவமானப்பட்டு சமூகமும் அவமானப்பட்டு நிற்கிறது.
இன்னமும் கூட ஹக்கீம், வட கிழக்கை இணைக்க வேண்டும் என போராடும் சுமந்திரனைத்தான் நம்புகிறாரே தவிர தானும் ஒரு சட்டத்தரணி என்பதை நம்பவில்லை.
இவ்வாறு சுமந்திரன் மூலம் இது விடயம் வழக்காடப்படும் போது சிங்கள இனவாதிகள்தான் சக்தி பெறுவார்கள்.
அதோ தமிழரும் முஸ்லிம்களும் சிங்கள அரசுக்கெதிராக ஒன்று சேர்ந்து விட்டார்கள். சிங்களவர் நாம் ஒன்று பட வேண்டும் என்பர்.
எனவேதான் சொல்கிறோம். முஸ்லிம்கள் ஓட்டுப் பெற்ற கட்சியின் தலைவரான ஹக்கீம் தலைமையில் எரிப்புக்கெதிராக நீதிமன்றம் போக வேண்டும். ஹக்கீமுக்கு வாதிடும் அறிவு இல்லை என்றால் சிறந்த சிங்கள சட்டத்தரணிகள் தலைமையில் வாதாடலாம். அதற்கான பணத்தை முஸ்லிம்களின் ஓட்டுக்களை கோடிக்கனக்கான ரூபாய்களுக்கு விற்ற முஸ்லிம் காங்கிரசின் நிதியில் இருந்தும் தாருஸ்ஸலாமில் கொள்ளையடித்த பணத்திலிருந்தும் பெறலாம். அப்படியும் முடியாது என்றால் முஸ்லிம் தனவந்தர்களிடமிருந்து பெறலாம். ஹக்கீம் அடுத்த பாராளுமன்றிலும் இந்த அரசுக்கு ஆதரவளித்து அமைச்சாராகுவார் என்பதால் நிச்சயம் தனவந்தர்கள் அவருக்கு பணம் வழங்குவர் என்ற நம்பிக்கை எமக்குண்டு.