சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுகமும் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியும் நேற்று (07) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் அஷ்ரஃப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகள் மியன்டாட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.எம்.ஜஹான் தலைமையில் இடம்பெற்றது.
மியன்டாட் விளையாட்டுக்கழகத்தின சீருடையினை அனுசரணையாளர் நவாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்;ந்து இடம்பெற்ற சீருடை அறிமுக சிநேகபூர்க கிரிக்கெட் போட்டியில் ஸஹிரியன் விளையாட்டுக்கழகம் மற்றும் மியன்டாட் விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் மோதிக்கொண்டன.
இப்போட்டி அணிக்கு 11 பேர் கொண்ட 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸஹிரியன் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஸஹிரியன் விளையாட்டுக்கழகம் 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றது.
இதில் ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் எம்.எம்.சறூக் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மியன்டாட் விளையாட்டுக் கழகத்தினர் 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியில் ஸஹிரியன் விளையாட்டுக்கழகம் 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இப்போட்டி நிகழ்வுக்கு மியன்டாட் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவருவம் தொழிலதிபருமான எம்.ஜே.எம்.காலித் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மியன்டாட் விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர்களான முன்னாள் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மிர், எம்.எம்.தாரிக், ஸஹிரியன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எஸ்.எச்.ஜிப்ரி, , பொருளாளரும் தொழிலதிபருமான எம்.நாசர், முகாமையாளரும், சிலோன் மீடியா போரத்தின் தலைவருமான றியாத் ஏ. மஜீத் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.