வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண விவசாயிகளின் நஷ்டஈட்டை வழங்குவதில் காலதாமத நிலை நீட்டித்த நிலையில் இன்று (16) அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான டீ.பி.ஹேரத், முஹான் டீ சில்வா அமைச்சின் செயலாளர், விவசாய காப்புறுதி திணைக்கள அதிகாரிகளை விவசாய அமைச்சில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்காமையால் அவர்கள் பாதிக்கப்பட்ட விதம், அடுத்த பயிர் செய்கைக்கு அவர்கள் தயாராக உள்ள நிலையில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் விளக்கி உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.
இவ்வருட ஆரம்பத்தில் பெய்த மழை காரணமாக கிழக்கு மாகாணம், அதிலும் குறிப்பாக அம்பாரை மாவட்டம் வெள்ளப்பெருக்கில் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன்போது அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரம் ஏக்கர் நெல் வேளாண்மை வெள்ளத்தில் அள்ளுண்டு பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இந்த விவசாயிகளுக்கு நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை ஏற்கனவே சந்தித்து விவசாயிகளின் பாதிப்பு நிலைகளை விளக்கி நஷ்டஈட்டை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனையோட்டி விவசாய அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு நஷ்டஈட்டை வழங்க தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு அன்று பணித்திருந்தார். இது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்பட்டும் மந்தகதியில் இருந்த நஷ்டஈடு வழங்கும் பணிகள் தொடர்பில் கேட்டறிந்த அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளை கடிந்து கொண்டதுடன் அடுத்த வாரத்தினுள் இந்த நஷ்டஈடுகளை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சின் செயலாளர், விவசாய காப்புறுதிக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் நஷ்டஈட்டுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் அடுத்த வாரம் நானோ அல்லது இராஜாங்க அமைச்சரோ நேரடியாக சென்று அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்த அமைச்சர், அமைச்சின் செயலாளர், அதிகாரிகளுக்கு அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நன்றிகளை தெரிவித்தார். இதனூடக பாதிக்கப்பட்ட விவசாயிகள் நன்மையடைய உள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
0 comments :
Post a Comment