விரிவுரையாளர் ஜமால்தீனுக்கு பிரியாவிடை வழங்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்!



தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் துறையின் முதன்மை விரிவுரையாளர்களில் ஒருவரான விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் அவர்கள் கடந்த (19.02.2024) ஆம் திகதி தனது பல்கலைக்கழக ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் கணக்கியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஏ. ஹலிம் அவர்களது தலைமையில் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தில் 2024.02.27 ஆம் திகதி இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களும் கௌரவ அதிதியாக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். சபீனா எம்.ஜி.எச். அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் அவர்கள் நிகழ்வுக்கு தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வருகை தந்திருந்தார். அன்னவருக்கு பீடத்தின் கல்விசார் உத்தியோகத்தர்கள் முதல் கல்விசாரா உத்தியோகத்தர்கள் வரை பொன்னாடைகள் போர்த்தி ஞாபகசின்னங்கள் வழங்கி கௌரவித்தனர்.

விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் தனது ஆரம்பகால பல்கலைக்கழக சேவையை பல்கலைக்கழக கல்லூரியில் தொடங்கி, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப உருவாக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, பின்னாளில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் நிரந்தர விரிவுரையாளராக 15.11.1996 ஆந் திகதி முதல் தன்னை பல்கலைக்கழக சேவையில் இணைத்துக் கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 27 வருடங்களுக்கு மேலாக தனது அளப்பெரிய ஆசிரியப் பணியை சிறப்பாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொண்டு பல்வேறுபட்ட மாணவச் செல்வங்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஒரு பெருந்தகை இவர்.

பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி; இன்றைய எமது பல்கலைக்கழகத்தின் உயர்வு நிலைக்கு அர்ப்பணித்து பாடுபட்டவர்களில் இவரும் பிரதானமானவராக கருதப்பட்டவர். தனது சேவைக் காலத்தில் பல்வேறு பட்ட மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் சார்பான நிகழ்ச்சி திட்டங்களை பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்துச் சென்றவர். அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகத்தின் தொழில் வள ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாளர் மேம்பாட்டு நிலைய பணிப்பாளராகவும் திறம்பட கடமையாற்றியவர்.

தன்னிடம் கற்ற மாணவர்கள் இன்று சர்வதேச மற்றும் நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட உயர் பதவிகள் மற்றும் நிர்வாக துறைகளில் மேலோங்கி இருந்த போதிலும் ஏன் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என பல்வேறுபட்ட உயர் நிலையில் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட போதிலும் அவர்களைப் பார்த்து பெருமிதம் கொள்பவர் இவர். தான் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிய காலம் வரையில் அனைத்து தரப்பினருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிக் கொண்ட இவர் மாணவர்களுக்கு நல்ல ஆசனாகவும் தன்னோடு கடமையாற்றிய சக உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனைகள் பல கூறக்கூடிய நல்ல நண்பனாகவும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தனது கடமைகளை நிறைவேற்றியவர்.

சமூக ரீதியாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களையும் குறிப்பாக நிந்தவூர் பிரதேசம் சார் வேலை திட்டங்கள் பலவற்றில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றியவர் இவர், நல்ல கணவனாக நல்ல தந்தையாக தனது குடும்பத்தையும் தனது குழந்தைகளையும் தன்னிடம் கற்ற மாணவர்களையும் நெறிப்படுத்தியதற்கு இன்றைய அவர்களின் வாழ்வியல் உயர்வுகள் சான்றாக அமைகின்றன.

நிகழ்வின்போது விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் அவர்கள் தொடர்பில் அவருடன் இணைந்து பயணித்தவர்கள்  தங்களது உள்ளக்கிடக்கைகளை அவிழ்த்து விட்டனர்.

நூலகர் எம்.எம். றிபாஉடீன், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் உள்ளிட்டவர்களுடன் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர்கள், சிரேஷ்ட, கனிஷ்ட விரிவுரையாளர்கள், பிரதி பதிவாளர் பி.எம். முபீன் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களும் ஜமால்தீன் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் தொடர்பில் விவரணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


















































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :