இது இந்நாட்டின் பல்கலைக்கழக முறைமையை பொறுத்த வரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல் ஆகும். வவுனியா பல்கலைக்கழகத்தின் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களில் இருந்து 250 பேர் இதன் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு துறை சார்ந்த வளவாளர்கள் மற்றும் நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
இதன் சம்பிரதாயபூர்வ ஆரம்ப விழாவில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜயகோன், பல்கலைக்கழக மானிய ஆணை குழுவின் சமூக நல்லிணக்க விடயங்களுக்கான தலைவர்பேராசிரியர் பிரேமகுமார டி சில்வா, தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் பணிப்பாளர் ஏ. பி. எம். அஷ்ரப் உள்ளிட்ட பேராளர்கள் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி உரையாற்றினார்கள். வவுனியா பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் இணைய வழி தொழினுட்பம் மூலமாக சிறப்புரை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மானிய ஆணை குழுவின் சமூக நல்லிணக்க விடயங்களுக்கான நிலையியல் குழு உறுப்பினரும், வவுனியா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டு உள்ள சமூக நல்லிணக்க மையத்தின் கல்வி, ஆராய்ச்சி, மற்றும் பயிற்சி விடயங்களுக்கான பொறுப்பாளரும், ஜனாதிபதி செயலணி உறுப்பினருமான பேராசிரியர் நந்தன சாந்தி விஜேசிங்க ஆற்றிய உரை வருமாறு
இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் கூட்டு பங்களிப்பில் இடம்பெறுகின்ற இப்பயிற்சி முகாம் தலைமைத்துவ மேம்பாட்டுக்கான பயிற்சி நிலையத்தை பொறுத்த வரையிலும் சரி, இந்நாட்டு பல்கலைக்கழக முறைமையை பொறுத்த வரையிலும் சரி முற்றிலும் புதிய விடயம் ஆகும்.
மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு பின்னர்கூட இந்நாட்டில் முழுமையான சமூக நல்லிணக்கம் இன்னமும் மலர்ந்து விடவே இல்லை. எனவே சமூக நல்லிணக்கத்தை நாளைய தலைவர்களான பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை இந்நாட்டில் மலர செய்வதற்கு நாம் முயற்சிக்கின்றோம்.
இந்நாட்டின் பல்கலைக்கழக முறைமையை பொறுத்த வரை வவுனியா பல்கலைக்கழகத்தில்தான் முதலாவது சமூக நல்லிணக்க மையம் அமைக்கப்பட்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவால் கடந்த மாதம் 11 ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சமூக நல்லிணக்க மையம் அமைக்கப்பட உள்ளது. இவற்றின் மூலம் கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி போன்ற விடயதானங்கள் கையாளப்படும்.
குறிப்பாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்க பெறாத மாணவர்களுக்காக பிரத்தியேக கற்கை நெறிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இக்கற்கை நெறிகள் மூலமாக இளையோர்கள் மத்தியில் கல்வி அறிவை விருத்தி செய்ய முடியும் என்பதும் திண்ணம்.
தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி முகாமில் பங்கெடுத்து கொண்டிருக்கின்ற வவுனியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டல், அறிவூட்டல், விழிப்பூட்டல், ஊக்குவித்தல் ஆகியனவும் போதித்து கொடுக்கப்படுகின்றன.
சவால்கள் நிறைந்த உலகத்தை வெற்றி கொள்வதற்கு இப்பயிற்சி முகாம் மாணவர்களுக்கு பேருதவியாக அமையும் என்று நான் விசுவாசிக்கின்றேன். அதே போல இனம், மதம், மொழி, சாதி போன்ற தடைகளை தகர்த்து முன்னோக்கி பயணிப்பதற்கும் இப்பயிற்சி முகாம் முத்தாய்ப்பாக அமையும் என்பது உறுதி.
இலங்கை நாட்டின் இளையோர்களை உலக ஆளுமைகளாக மலர செய்வதே எமது இலக்கு ஆகும். மிலேனியம் சவால்களை வெற்றி கொள்கின்ற வகைகளில் இந்நாட்டு பல்கலைக்கழகங்களின் சமூக நல்லிணக்க மையங்கள் மூலமாக இவர்கள் தயார் செய்யப்படுவார்கள். இதற்காக பல கற்கை நெறிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
குறிப்பாக சமாதானம் மற்றும் அபிவிருத்தி கற்கை நெறிகள் டிப்பிளோமா/ கலைமாணி/ முதுமாணி மட்டங்களில் நடத்தப்பட உள்ளன. அதே போல அரசியல், ஊடக துறைகளில் உள்ள பெண்களுக்கு சான்றிதழ் கற்கை நெறிகள் நடத்தப்பட உள்ளன.
இலங்கை பல்கலைக்கழக முறைமையில் காலம் காலமாக கண்ணோட்டங்கள், கோட்பாடுகள், கருத்துகள் ஆகியன போதித்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை நடைமுறையில் கையாள்வதற்கான திறன்கள் போதித்து கொடுக்கப்படுவதாக இல்லை. இந்த குறைபாட்டையும், இடைவெளியையும் நல்லிணக்க மையங்கள் ஈடு செய்யும்.என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது பல்கலைக்கழக முறைமையில் புரட்சிகரமான இரு மாற்றங்களை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ ஏற்படுத்தி உள்ளார். ஒன்று தகவல் மற்றும் தொடர்பாடல்கள் பிரிவை கலை துறை மாணவர்களுக்கு கணனி கூடங்கள், ஆளணி முகாமைகள், இணைய வசதிகள் ஆகியன அடங்கலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிறுவி கொடுத்து உள்ளார்.
மற்றையது பல்கலைக்கழகங்களில் சமூக நல்லிணக்க மையங்களை நிறுவுவதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானிய ஆணை குழுவில் சமூக நல்லிணக்க விடயங்களுக்கான நிலையியல் குழுவை உருவாக்கி தந்து உள்ளார். இந்நாட்டில் தற்போது எதிர்மறையான சமாதானமே நிலவுகின்றது என்பது மிக துரதிஷ்டமான விடயம் ஆகும்.சந்தேகம், நம்பிக்கையீனம், பயம் போன்றவை எதிர்மறையான சமாதானத்தின் அம்சங்கள்.
எதிர்மறையான சமாதானத்தில் இருந்து மீண்டு நேர்மறையான சமாதானத்தை அடைய வேண்டி உள்ளது. நேர்மறையான சமாதானத்தின் மூலம் அனைவருக்கும் சம வாய்ப்புகள், சம வளங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ஜனாதிபதி ஏற்படுத்தி உள்ள இரு புரட்சிகர மாற்றங்களும் 2050 ஆம் ஆண்டில் ஆசிய பிராந்தியத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுமலர்ச்சிக்கான ஆளுமையாக, தலைமையாக இலங்கையை மலர செய்வதில் உள்ள சவால்களை முறியடிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளே ஆகும் என்றால் மிகை ஆகாது.
0 comments :
Post a Comment