தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்து மிளகாய்த் தூளைத் தூவி அடித்து சித்திரவதை செய்த சம்பவமொன்று அட்டன் குடாகம, சமகி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஹட்டன், குடாகம, சமகி மாவத்தையைச் சேர்ந்த சந்தேக நபர், ஹட்டன் - டிக்கோயா நகரசபையில் சுகாதாரப் பணியாளராக கடமையாற்றி வந்ததாகவும் மதுவுக்கு அடிமையான அவர், மது போதையில் தொடர்ந்து மனைவி மற்றும் பிள்ளைகளை சித்திரவதைக்கு உள்ளாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது இரு பிள்ளைகளையும் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு அனுப்பியதாகவும் தந்தை கூறிய பொருட்களுக்கு மேலதிகமாக விறகு கட்டு ஒன்றை பிள்ளைகள் வாங்கியதனால், கோபமடைந்த தந்தை, பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியதாகவும் தெரிய வருகின்றது.
பிரதேசவாசிகள் குறித்த இரு சிறுவர்களை மீட்டு அட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அட்டன் பொலிஸார் நேற்று (02) இரவு இரண்டு பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (03.12.2021) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், சிறுவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சித்திரவதைக்கு உள்ளான இரண்டு குழந்தைகளும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் தனது மனைவியை இவ்வாறு தாக்கியதாகவும் குழந்தைகளை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்ததாகவும் ஹட்டன் பொலிஸாரால் இதற்கு முன்னர் பல தடவைகள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவனின் சித்திரவதையை தாங்க முடியாத மனைவி, கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment