மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னயில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் டிப்போவை மூடுவதற்கு சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜி அஸீஸுல் ரஹீம் தெரிவித்தார்.
குறித்த பஸ் டிப்போவில் இருந்து கண்டி, கட்டுநாயக்க, கொழும்பு உள்ளடங்களாக செவனப்பிட்டி, கட்டுவன்வில, ரிதிதென்ன, வடமுனை ஓமனியாமடு, ஜெயந்தியாய, கடவத்த மடு, புணானை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை சேவையையும் இப் பேருந்து சாலை மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வேலைத் திட்டத்தின் கீழ் 2006 ஆம் ஆண்டு இவ் பஸ் டிப்போ திறந்து வைக்கப்பட்டது.
பிழையான தகவல்களின் அடிப்படையில் சுமார் பதினைந்து வருடங்களாக மிகவும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்கி வரும் குறித்த பஸ் டிப்போவை முழுமையாக மூடுவதற்கு சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை காரணம் காட்டி தற்காலிகமாக வாழைச்சேனை பேருந்து சாலையுடன் ரிதிதென்ன சாலை இணைக்கப்பட்டுள்ளதோடு அதன் பஸ் வண்டிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய ஊழியர்கள் வாழைச்சேனை பேருந்து சாலையுடன் இணைந்து கடமையாற்றுமாறு உயர் அதிகாரிகளால் பணிக்கப்பட்டுள்ளதுடன் டிப்போவில் களஞ்சிய சாலையில் இருந்த 60 வீதமான உதிரிப்பாகங்கள் வாழைச்சேனை பேருந்துசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மிகுதி உதிரிப்பாகங்களை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.
கொழும்பு A/11 பிரதான வீதியில் அமைந்துள்ள இச்சாலை சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கியதாக தனது சேவைகளை நடத்துவதுடன் வாழைச்சேனை, வாகரை பேருந்து சாலைகளை விட அதிகமான வருமானங்களை ஈட்டும் சாலையாக காணப்படுகின்றது. அத்துடன் வாழைச்சேனை பேருந்து சாலைக்கு ரிதிதன்ன டிப்போவினூடாக சில வருட காலமாக சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, இவ்விடயம் தொடர்பில் பிரதேச அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்புகள், கவனம் செலுத்துவதுடன் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த ரிதிதென்ன பேருந்து சாலையை மீண்டும் அதே இடத்தில் சிறப்பாக இயங்க அனைவரும் ஒன்றிணைந்து உரிய தரப்பினர்களுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments :
Post a Comment