அண்மைக்காலமாக கொரோனா தீநுண்மியின் தாக்கம் படுவேகமாக அதிகரித்துவருவதனால் வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மனாலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கின்போது பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆக ஆலயநிருவாகிகள் பத்துப்பேருக்கு மட்டுமே வழமைபோல பாரம்பரிய சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காரைதீவு உதவி பிரதேசசெயலாளர் எஸ்.பார்த்தீபன் காரைதீவு பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனையில் இடம்பெற்ற மக்கள்பிரதிநிதிகளது கூட்டத்தில் தெரிவித்தார்.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மனாலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை திருக்கதவுதிறந்து கல்யாணக்கால் நடும் வைபவத்துடன் ஆரம்பமாகி 25ஆம் திகதி செவ்வாய் அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையவிருக்கிறது.
அங்கு அவர் மேலும் கூறுகையில்:
பாரம்பரிய சடங்கு என்பதால் அதை கிரமமாக அனைத்து சம்பிரதாயங்களையும் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பதிவுசெய்யப்பட்ட ஆலயநிருவாகிகள் பத்துப்பேர் மாத்திரம் சடங்குகாலத்தில் ஆலயத்தில் பூரணமாகத் தங்கியிருந்து அதனைச்செய்யவேண்டும் என எமது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கடைகளுக்கும் ஏனைய வெளிவிடயங்களுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. நேர்த்திகள் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் அன்போடு ஒத்துழைக்கவேண்டும்.என்றார்.
0 comments :
Post a Comment