கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கு தயாராக இருப்பதாக தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
வாராந்த கேள்வி பதில் மூலம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது இனத்தின் நன்மை கருதி, தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன.
இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தயாராக இருக்கின்றோம்.
இங்கு நான் அழுத்தம் திருத்தமாக கொள்கை அடிப்படையில் என்று குறிப்பிட்டிருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கை என்னவென்று குறிப்பிடவேண்டும்.
இணைந்த வடக்கு-கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வு தரப்பட வேண்டும். இன்றேல் இறுதித் தீர்வு தொடர்பில் சர்வதேச மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பும் அதன் அடிப்படையில் செயற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
இதய சுத்தியுடன் செயற்படும் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைத்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராக இருக்கின்றது. சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுபற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாதுவிட்டாலும், அதில் வெற்றியீட்டிய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது இதுபற்றி வலியுறுத்தி இருந்தார்கள்.
ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும். தமது செயல்களில் நம்பிக்கை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகளை செய்யவேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment