நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால், மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று, தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக, தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வருடத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாதங்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 18,500 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாட்டங்களில் பெருமளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 4 மாதங்களில் கொழும்பில் 2685 பேரும், கம்பஹாவில் 1580 பேரும், களுத்துறையில் 913 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.