கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவின் பணிப்புரைக்கமைய கடந்த சில காலம் திருகோணமலை பொது மீன் சந்தை மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றின் செயற்பாடுகள் திருகோணமலை தனியார் பேரூந்து நிலையம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களை இயல்புவாழ்க்கைக்கு கொண்டுவரும் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த சந்தைகள் ஏலவே நடைபெற்ற சந்தைத்தொகுதிகளில் நாளை தொடக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் இதன்போது சமூக இடைவெளியை பேணி பொறுப்புடன் செயற்படுமாறும் உரிய தரப்பினரை இதனை கண்காணிக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.
மாவட்டங்களுக்குள் அத்தியவசிய சேவை கருதி மேற்கொள்ளப்படும் போக்குவரத்து நடவடிக்கைகளில் சுகாதார நடைமுறையை அவசியம் பேணுவதுடன் அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு குறித்த சேவைகளை வழங்குபவர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி இவ்வைஸிலிருந்து பாதுகாப்பு பெற உறுதுணைபூன வேண்டும் என்றும் இதன்போது அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா,மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ்,திருகோணமலை நகரசபை தலைவர்,பொலிசார்,மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
