கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள பின்னடைவுக்கு தீர்வாக ஊழியர் சேமலாப நிதியத்தின் வைப்பிலுள்ள தொகையில் 20% உறுப்பினர்களுக்கு விடுவிக்கலாம் என பிரதமரின் பொருளாதார ஆலோசகரும், முன்னாள் மத்திய வங்கி ஆளுனருமான அஜிட் நிவாட் கப்ரால் முன்வைத்துள்ள யோசனையானது அரசாங்கத்தின் தோல்வி தன்மை காட்டுவதாக JVPயின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் பையிலிருந்து எடுத்து செலவிட வேண்டுமென்பது அரசாங்கத்தின் ஆலோசனையாக இருக்கின்றது.
வங்கியிலிருக்கும் பணத்தை எடுத்து 2 மாதங்கள் சாப்பிடுங்கள் என்ற கதையையே இவர்கள் கூறுகின்றனர். எனினும் உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் சிங்கப்பூர் தனது மொத்த தேசிய உற்பத்தியில் 11% கொரோனா வைரஸ் ஆபத்தை எதிர்கொள்ள ஒதுக்கியுள்ளது. பஹ்ரேன் 14% ஒதுக்கியுள்ளது.
உலகில் முன்னேறிய அபிவிருத்தியடைந்த நாடுகள் இதனை விட பெருந்தொகையை ஒதுக்கியுள்ளன. ஜேர்மனி 22% ஒதுக்கியுள்ளது. நாம் கொரோனாவிலிருந்து நாட்டை மீட்க 0.30% அதாவது $300 Million ( சுமார் 5,700 கோடி ரூபா ) செலவாகும் என மதிப்பிட்டுள்ளோம். இது போதுமான தொகையல்ல.
அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்குள் ஊழியர் சேமலாப நிதியை பழிக்கொடுக்கவே அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. ஊழியர் சேமலாப நிதியை விடுவிப்பதன் மூலம் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு ஓரளவு உத்வேகம் ஏற்படக் கூடும். இந்த உத்வேகத்திற்கு ஊழியர்களின் பணத்தை செலவிட அரசாங்கம் யோசனை முன்வைக்கின்றது. ஊழியர்களின் பணத்தை செலவிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அரசாங்கம் ஒன்று தேவையில்லை.
அரசாங்கத்தின் இச் செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் தோல்விடைந்துள்ளது என்பதையே காட்டுகிறது என குறிப்பிட்டார்.