தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து மதுபானசாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்கும், மதுபானக் கடைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுபானம் விற்பனை சாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை அதனை மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்கு கட்டம் கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மதுபான சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் மதுபான சாலைகளை இரகசியமாக திறந்து வைத்து தோட்ட பகுதி மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு விற்பனை செய்கின்ற மதுபான போத்தல்களை கொண்டு செல்லும் சிலர் தோட்ட பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே மறு அறிவித்தல் வரை இப்பிரதேச மதுபான சாலைகளை சீல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த மதுபானசாலைகளின் பாதுகாப்பு கருதி தங்க வைக்கப்பட்டிருந்த ஊழியர்கள் பொலிஸாரினால்; அகற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.