கொழும்பு மாவட்ட கொரோனா இடர் குழுக்கூட்டத்தில் மனோ கணேசன்
இன்று கொழும்பு மாவட்ட கொரோனா இடர் குழுக்கூட்டம், மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள், எம்பீக்கள் தினேஷ் குணவர்தன, பந்துல்ல குணவர்த்தன, காமினி லொகுகே, மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க, ஹர்ஷா டிசில்வா, முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், எரான் விக்கிரமரத்ன, தயா கமகே மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் உட்பட அதுகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டம்பற்றி, மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கொழும்பு மாவட்டத்தில் வாழ்வாதார நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களாக 408,650 பேர் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் சமுர்த்தி பெறுனர் உட்பட 103,788 பேருக்கே இதுவரையில் வாழ்வாதார நிவாரணம் வழங்கப்படுகிறது. ஏனையோர அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.
கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும், நாளாந்த தொழிலாளர், சுயமுதலீட்டாளர், கடை சிப்பந்திகள், வேலையில்லாதோர் என்ற அடிப்படைகளில் வாழ்வாதார நிவாரணம் பெற வேண்டியவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் கிராம சேவையாளர்கள் மூலம் நடைபெறுகிறது.
தம்மை எக்காரணம் கொண்டும் கிராம சேவையாளர்கள் பதிவு செய்யவில்லை என எவரும் நினைப்பார்களேயானால், மாநகரசபை உறுப்பினர்கள் மூலம் தமது விபரங்களை விசேட விண்ணப்பங்கள் மூலம் வழங்கலாம். இதற்கான உரிய அறிவுறுத்தல்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பில் நிரந்தரமாக வசிக்காத, வெளிமாவட்டங்களை சேர்ந்த 19,428 இருக்கின்றார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.. இவர்களை, 20ம் திகதி வரை கொழும்பில் தங்க வைக்கப்படுவார்கள்.
நோய் தொற்று தொடர்பில் முதநிலையாளர்களாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள, கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் சுமார் 2,000 பேர்களுடன், இந்த வெளிமாவட்டகாரர்களும், முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். நேற்று சீனாவில் இருந்த வந்த சோதனை கருவிகளை முன்னுரிமை அடிப்படையில் இவர்களை, சோதனை செய்ய பயன்படுத்துவதற்கு நாம் முடிவு செய்தோம்.
இதன் பின்னரே வெளிமாவட்டக்காரர்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்நிலையில், வெளிமாவட்டக்காரர்கள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுகிறார்கள். எந்த ஒரு பொலிஸ் நிலையத்திலும் இப்படியான பதிவுகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டால், எம்மை தொடர்பு கொள்ளலாம்.
கொழும்பு நகரில், அத்தியாவசிய பொருள் விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு கிராம சேவகர்கள் பிரிவுகளிலும் குறிப்பிட்ட தனியார் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் நாம் தீர்மானித்தோம்.
