திணைக்கள தலைவர்கள் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .குணசிங்கம் சுகுணன் தெரிவிப்பு
ஏ.எல்.எம்.ஷினாஸ்-
கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் (28.03.2020) கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் பொலிஸ், முப்படைகளின் பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனை,மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து உரையாற்றும்போது, தற்போது நடைமுறையில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்ட காலத்தில் வியாபார நடவடிக்கைகள் விசேட தேவைகளுக்கான போக்குவரத்து போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பாஸ் நடைமுறை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பாஸ் நடைமுறையானது ஒழுங்குபடுத்தப்படாததால் பல்வேறு தரப்பினரும் போக்குவரத்து பாஸ் அனுமதியை வைத்துக்கொண்டு பிழையான செயற்பாடுகளுக்கு அல்லது தவறாக பயன்படுத்துகின்றனர். இதேவேளை சில அரசியல்வாதிகளும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும் பாஸ் வழங்குவது அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் வழங்கப்படவேண்டும். அரசியல் மயப்படுத்தப்படாமல் பிரதேச செயலாளர் சுகாதாரப் பிரிவினர் பொலிஸ் தரப்பு மாத்திரமே பாஸ் உறுதிப்படுத்தி வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.