ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழித்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக பல முன்மாதிரியான திட்டங்களை முன்னெடுத்துச் செயற்படுவது பாராட்டுக்குரியது' என பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச அமைப்பாளருமான அஸ்பர் உதுமாலெவ்வை தெரிவித்தார்.
கொரோனா தொற்று நோயிலிருந்து அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
'கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை மதித்து நடப்பதோடு, ஊரடங்குச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஜனாதிபதியின் திட்டங்களுக்கு மக்களாகிய நாம் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்த முடியும். அதற்கான திராணியும் வல்லமையும் நமது ஜனாதிபதிக்கு இருக்கிறது.
நமது மாவட்ட மக்கள் ஊரடங்கச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்கு பல நிவாரண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினரும் முப்படையினரும் அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி வருகிறார்கள். மக்களாகிய நாமும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
ஜனாதிபதியை விமர்சனம் செய்தவர்கள் கூட அவரது செயற்பாடுகளை பாராட்டுகின்ற வகையில், தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலே உலக நாடுகளில் தர வரிசையில் இலங்கையை ஐந்தாவது இடத்திற்குக் கொண்டு வந்திருக்கின்ற அவரது செயற்பாடுகள் எல்லோருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சுகாதாரத் துறையினருக்கும் முப்படையினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், திகாமடுல்ல மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் நேரடி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன். இக்கட்சியிலே சம்மாந்துறை தொகுதியிலே போட்டியிடுவதற்கு நானும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டமையை முதல் வெற்றியாகக் கருதுகின்றேன். இந்த ஆசன ஒதுக்கீட்டிலே நாம் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை எதிர்த்து பெற்றெடுத்தள்ளோம்.
எமது சமூகம் எதிர்நோக்குகின்ற பல இன்னல்களை தற்போதைய பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதன் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை நமது சமூகம் இப்போது புரிந்துள்ளது. நமது முஸ்லிம் தலைமைகள் சமூகத்தை பிழையான வழியில் இட்டுச் சென்றதை மக்கள் அறிவீர்கள். கடந்த பல வருடங்களாக முஸ்லிம் சமூகம் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு விடிவைக் காண்பதற்கான ஒரே தெரிவாக பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதேயாகும். இதன்மூலம் இம்மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய நல்ல செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு இம்மாவட்ட மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்' என்றார்.