அனைத்து கட்சி ஒன்றிய தலைவர் நிசாம் நம்பிக்கை
கொரோனா அற்ற தேசமாக ஸ்ரீலங்கா வெகுவிரைவில் மலரும் என்கிற பூரண நம்பிக்கையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் கொரோனா தொற்று பரம்பலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தருகின்றன என்று அம்பாறை மாவட்டத்தை தளமாக கொண்டு இயங்குகின்ற அனைத்து கட்சி அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும், நாட்டை காக்கும் இளைஞர் அணியின் பிரதி தலைவருமான முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.இவர் இது தொடர்பாக நேற்று விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவை வருமாறு
கொரோனா தொற்று பரம்பலுக்கு எதிரான ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் தடுப்பு நடவடிக்கைகள் அற்புதமானவை. கொரோனாவை எமது தேசம் முழுமையாக வெற்றி கொள்ள முடியும் என்கிற பூரண நம்பிக்கையை அவை தருகின்றன.
குறுகிய சுய இலாப அரசியல்வாதிகள் முட்டைக்குள் மயிர் பிடுங்குவது போல இந்நடவடிக்கைகளை விமர்சனம் செய்ய கூடும். ஆனால் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இந்நாட்டு மக்கள் அனைவரினதும் கதாநாயகனாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ உயர்ந்து நிற்கின்றார் என்பதே உண்மை நிலை ஆகும்.
தீர்க்கதரிசனம், தூர நோக்கு, தெளிந்த சிந்தனை, செயல் திறன் ஆகியவற்றை கொண்ட பெருந்தலைவரை நாம் ஜனாதிபதியாக பெற்று இருக்கின்றோம், ஆண்டவனின் அருட்கடாட்சத்துடன் வெகுவிரைவில் நாம் அனைவரும் மீட்சி பெறுவோம் என்கிற நல்ல செய்தியை இத்தருணத்தில் சொல்லி வைக்கின்றேன்.
