இன்று கல்முனை மாநகரசபைதமிழ் உறுப்பினர்கள் போர்க்கொடி!
காரைதீவு நிருபர் சகா-ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிலையான அபிவிருத்திக்கு 1900 கோடி ரூபாய் நிதி கல்முனை மாநகரசபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் தொடர்பான விளக்கங்களும் கலந்துரையாடலும் திட்டத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களை அழைத்து வலுவூட்டுவதற்கான அமர்வு இன்று (5) மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதற்கான அழைப்பு கடிதங்கள் கல்முனை மாநகரசபை மேயரின் கையொப்பத்துடன் மாநகரசபையின் சில உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இதேவேளை அழைப்பு கடிதம் கல்முனை மாநகரசபையின் பல தமிழ் உறுப்பினர்களுக்கு கிடைத்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அழைப்பு கடிதங்கள் மேயருக்கு சார்பு போக்குடையவர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டதாகவும் தாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாகவும் இக்கலந்துரையாடல் இடம்பெற்ற இடத்திற்கு சென்று த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவர் த.வி.கூட்டணி உறுப்பினர்கள் மூவர் மற்றும் அ.இ.ம.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சிவலிங்கம் மற்றும் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்
இந்த அபிவிருத்தி திட்டமானது கல்முனை மாநகரசபைக்குட்பட்ட அனைத்து மக்களுக்கும் சொந்தமானது குறிப்பிட்ட மேயர் ஒருவருக்கோ குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கோ மட்டும் உரியது அல்ல.
கல்முனை மாநகரசபை மேயர் தனக்கு வாசியானவர்களை மட்டுமம் அரவணைத்து ஏனையவர்களை புறக்கணித்து பல விடயங்களை முன்னெடுக்க முனைகிறார்.
இன்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்பான கலந்துரையாடலுக்கான அழைப்பு திட்டமிட்டே எங்களுக்கு வழங்கப்படவில்லை இது கண்டிக்கத்க்தாகும் என்றார்.
த.தே.கூ உறுப்பினர்களான க.சிவலிங்கம், சந்திரசேகரம் ராஜன்,பொன். செல்வநாயகம் த.வி.கூட்டணி உறுப்பினர்களான செல்வா வ.சந்திரன் கு.விஜயலெட்சுமி ஆகியோரும் அ.இ.ம காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான முபித் உள்ளிட்டோர் தங்களை அழைக்காமைக்கு எதிர்பை தெரிவித்தனர்.