கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
வெளிநாட்லுவல்கள் அமைச்சில் நடைபெற்ற இந்த மாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அசைமச்சர் குற்றம் சாட்டினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி பொறுப்பை ஏற்ற பின்னர் அவரது நிர்வாகத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு தூதரகத்தில் பணியாற்றும் இந்த பெண் இலங்கையை சேர்ந்தவர். இவர் இலங்கை சட்ட விதிகளுக்கு அமைவாக குறிப்பிட்ட இந்த சம்பவத்தை எதிர்கொண்டிருந்தால் குறித்த பெண் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.
சம்பவம் குறித்து பொலிஸாரும் சி.ஐ.டி.பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இந்த பெண் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவரிடம் இருந்து பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கும் அவர் முன்வரவில்லை. இவர் தற்பொழுது உடல் நல குறைவாக காணப்படுகின்றார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவரது பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் உரிய பாதுகாப்பை வழங்க பொலிஸார் தயாராக உள்ளனர். தற்பொழுது இவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சுவிஸ் தூதுவருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெளிவு படுத்தியுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கையை அடுத்து நீதவான் நீதிமன்றம் இவர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளது. விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
