வைத்திய நிபுணர் இக்பால் காத்தான்குடி நகரசபையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தெரிவிப்பு..
அதிகரித்து வரும் புற்றுநோயின் தாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல் காத்தான்குடி நகரசபையின் கௌரவ தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இன்று காத்தான்குடி நகரசபையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. இக்பால் மற்றும் அவரது குழுவினர் கலந்துகொண்டு காத்தான்குடி நகரத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் அதனுடைய தாக்கங்கள் தொடர்பாக குறிப்பாகவும் காத்தான்குடி மக்கள் எவ்வாறு மேற்படி கொடிய நோய்க்கு உள்ளாகின்றார்கள் போன்ற முக்கிய விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்கள்..
மேற்படி கலந்துரையாடலில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸ்ருத்தீன், காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பாரிய நோய் நிவாரண குழுவினர், ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஆலோசித்தனர்.
மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக ஒரு வருடகால செயற்றிட்டம் ஒன்றினை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசனை செய்யப்பட்டு அதற்கென காத்தான்குடி நகர சபை தவிசாளரின் தலைமையில் நகரசபையின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வைத்திய அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் சம்மேளனம் மற்றும் ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழு தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



