ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான அன்பெரல் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட பிரதிநிதி ஹெரி றைசாக்சொனொ மற்றும் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (14) வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள், நடுநிலைத் தன்மை, தேர்தல் தொடர்பில் மக்களின் ஆர்வம், ஊடக நிறுவனங்களின் வகிபாகம், மக்களை வாக்களிக்கத் தூண்டும் செயற்பாடுகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல், செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் சிலோன் மீடியா போரத்தின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் ஹெரி றைசாக்சொனொவுக்கும் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீதுக்குமிடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இச்சந்திப்பில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத், சிலோன் மீடியா போரத்தின் தற்கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதித் தேர்தல் கால பிரச்சாரத்தின் போது அரச ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தியது போன்று தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் தவறிழைத்துவிட்டார். தேர்தல் காலத்தில் ஊடகங்களை கவனிப்பதற்கும் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் செய்திகளை தனிக்கை செய்வதுக்குமாக 'ஊடக கண்காணிப்பு குழு' ஒன்றினை நிறுவி ஊடகங்களை கட்டுப்படுத்தியிருக்கலாம் என்ற ஆலோசனையினையும் முன்வைத்தார்.
மேலும் தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிக்குள் ஊடகவியலாளர்கள் உட்செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற எழுத்து மூல கோரிக்கையினை சிலோன் மீடியா போரத்தினால் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் இன்னும் அவ்விடயம் சம்பந்தமாக பதில் கிடைக்கவில்லை என்பதை சுற்றிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.