அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினரால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்புக் கூட்டமும் ஒன்றுகூடலும் அக்கட்சியின் மத்திய குழுவின் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது அக்கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது தேர்தல் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் அரசியல் கட்சிகளுக்கிடையில் நம்நாட்டில் இடம்பெறுவது ஒரு வழமையான சம்பவமும், சம்பிரதாயமும் ஆகும்.
மேற்படி விடயம் தொடர்பாக ஏற்கனவே எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களும் இவர்களை அங்கீகரித்து மீண்டும் இக்கட்சியில் இணைத்துக்கொள்வதற்கு தனது பூரணமான சம்மதத்தையும் தெரிவித்துள்ளார். எனவே எமது கட்சியின் தலைமை எடுத்த முடிவை நாங்களும் ஏற்றுக்கொண்டு அதற்கமைவாக ஏனைய போராளிகளும் ஆதரவாளர்களும் கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து நாம் மீண்டும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்க நாம் எல்லோரும் தயாராக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேற்படி கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான யூ.எம். வாஹித், எஸ்.எல்.எம். பலீல் உட்பட அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளையும் பற்றி நாம் எவ்வாறு தொடரந்தும் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகளையும் அவர்களின் அபிப்பிராயங்களையும் தெரிவித்துக் கொண்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.