-கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை-
சமூகத்தின் நலன்கருதி அட்டாளைச்சேனை உள்ளடங்களாக கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளர்ப்பதற்கு இன்ஷா அல்லாஹ் பக்கபலமாக இருப்பேன் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தரர்.
தேசிய காங்கிரஸிலிருந்து விலகிய அக்கட்சியின் இணை ஸ்தாபகரும் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் அவருடன் விலகிய கட்சி முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரஸில் மீள இணையும் நிகழ்ச்சி கொழும்பு தாறுஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் (16) நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், பெரும் தலைவர் காலத்தில் விசுவாசமாக இருந்து கட்சியாக தியாகங்களை செய்திருக்கின்றோம். அது போன்றுதான் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும், கட்சிக்கும் விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தோம்.கட்சித்த தலைமை எங்கள் மீது சந்தேகிக்கின்றது என்பதை உறுதியாக அறிந்த பின்னர் எந்த எதிர்பார்ப்புமின்றி கட்சிளை விட்டு வெளியேறினோம். தலைமைக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. சிலரது பொய்யான வதந்தியை நம்பி தலைமை எங்கள் மீது சந்தேகப்பட்டது மட்டுமல்ல கடந்த ஒரு வருடமாக ஊடகங்கள் மூலம் எதிரான செய்திகளையும் பதிவிட்டனர். கட்சித் தலைமை சந்தேகப்பட்டால் ஒரு செக்கன் கூட இருக்கமாட்டோம். தலைவர் அஷ்ரப் அவர்களுடைய காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போராளியாக இருந்திருக்கின்றோம். பிழையென்றால் தைரியமாக பேசுவோம். ஒரு போதும் தேசிய காங்கிரசுக்கு துரோகம் செய்யவில்லை. பாரிய பணி செய்திருக்கின்றோம். இந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் பாரிய பொறுப்புடன் கிழக்கு முழுவதும் கட்சிப் பணி செய்திருக்கின்றேன். என்னுடன் இருந்த முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், உலமாக்களும் வேளியேறினார்கள்.
தேசிய காங்கிரஸை விட்டு பிரிந்திருந்த ஒரு வருட காலப் பகுதிக்குள் பல கட்சிகள் அழைப்பு விடுத்தனர். இருந்த போதிலும் இன்று சமூகத்தின் நலனுக்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்திருக்கின்றோம். எங்களது இணைவினை முன்னிட்டு முஸ்லிம் காங்கிரஸ் அனைவரும் சந்தோசப்பட வேண்டும். இந்தக் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக செயல்படுவோம். கடந்த காலங்களில் அரசியலுக்காக முரன்பட்டிருப்போம். அதையெல்லாம் மறந்து முஸ்லிம் காங்கிரஸை புது யுகம் படைப்போம். கட்சியை மேலும் வளர்க்க ஒறு;றுமைப் படுவோம் எனவும் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.