சமாதானம், சகவாழ்வைப் பொதிந்து நிற்கும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும், இலங்கை வாழ் சகல இதயங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, அவரது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இஸ்லாத்தின் இறுதிக் கடமையான புனித ஹஜ் கிரியைகளை, ஹாஜிகள் புனித மக்காவில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில், உலக வாழ் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
கடந்த நோன்புப் பெருநாளை, மிகுந்த மன வேதனையுடன் கொண்டாடிய நாம், தற்போது நம்மத்தியிலே மலர்ந்துள்ள ஹஜ்ஜுப் பெருநாளை ஓரளவு மன நிறைவுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இதை, இறைவன் நமக்களித்த பெரும் பாக்கியம் எனக் கருத வேண்டும்.
நாட்டில் அமைதி, சமாதானம், நல்லெண்ணத்துடன் வாழவே முஸ்லிம்கள் விரும்புகிறார்கள். இதனையே அல் குர் ஆனும் நமக்குப் போதிக்கின்றது.
இன்றைய பெருநாளும் இதனையே நமக்குச் சொல்லித் தருகின்றது.
இன்றைய பெருநாள், நமக்கு மிகச் சிறந்த படிப்பினைகளைக் கற்றுத் தருகின்றது. அந்தப் படிப்பினைகளை சிரமேற்கொண்டு, நாம் புது வாழ்க்கையை புதிய உத்வேகத்துடன் ஆரம்பிக்க வேண்டும். ஏனையோருக்கு மிகச் சிறந்த மானுடர்களாக முன்மாதிரியானவர்களாக நடக்க வேண்டும். இது தான் இன்றைய எமது அவசியத் தேவைப்பாடாகும்.
சாந்தி, சமாதானம், சக வாழ்வு என்பவற்றைப் போதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் ஊடாக, நமக்கு இன்னும் தேவையான எத்தனயோ சிறந்த நல்ல படிப்பினைகள், அழகிய முன் மாதிரிகள் நிறையவே உள்ளன. இவற்றைக் கடைப்பிடித்து வாழ்வோமேயென்றால், ஈருலகிலும் நிச்சயம் எமக்கு ஜெயம் பெறலாம். இந்த ஜெயத்தைப் பெற, இன்றைய பெருநாள் தினத்தில் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக...!
